Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
1991-க்குப் பின் தமிழகத்தைக் வறுத்தெடுத்த ஜூலை: மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

1991-க்குப் பின் தமிழகத்தைக் வறுத்தெடுத்த ஜூலை: மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

Samayam Tamil 1 week ago

மிழகத்தில் கடந்த 35 ஆண்டுகளில் நிலவிய மிக வெப்பமான ஜூலை மாதங்களில் ஒன்றாக 2026 ஜூலை பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் பகல் வெயிலும், இரவிலும் தணியாத கடுமையான புழுக்கமும் மாநிலத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தன. வானிலை மையத்தின் தரவுகளின்படி, 1991-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான இரண்டாவது மிக வெப்பமான ஜூலை மாதம் இதுவாகும்.

மதுரையில் உச்சியைத் தொட்ட வெப்பநிலை

மாநிலத்திலேயே மிகக் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக மதுரை உள்ளது. ஜூலை மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மதுரையில் பகல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி நிலவியது. குறிப்பாக, இம்மாத்தில் மதுரையின் உச்சபட்ச வெப்பநிலையாக 42.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது 1991-க்குப் பிறகு ஜூலை மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.

அதேபோல, மதுரையின் சராசரி இரவு நேர வெப்பநிலையும் 27.1 டிகிரி செல்சியஸாக உயர்ந்திருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் 24 மணி நேரமும் தணியாத வெப்ப அழுத்தத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இரவிலும் குறையாத வெப்பப் புழுக்கம்

பகல் நேர வெயிலை விட, இரவில் பதிவாகும் உயர்ந்த வெப்பநிலையே தற்போதைய பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தைச் உணர்த்துவதாக வானிலை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவுத் தலைவர் வி.ஆர். துரை இது குறித்துக் கூறுகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாகவே இருந்தது என்றார்.

உதாரணமாக, சென்னை மீனம்பாக்கத்தில் சராசரி இரவு நேர வெப்பநிலை 28.3 டிகிரி செல்சியஸாகவும், புதுச்சேரியில் 28.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. இரவிலும் வெப்பநிலை குறையாததாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததாலும் நள்ளிரவிலும் கடுமையான புழுக்கம் நீடித்தது.

பிற மாவட்டங்களின் நிலைமை

கடலோரப் பகுதிகளில் கடல் காற்று வீசியபோதிலும், காற்றில் நிலவிய அதிக ஈரப்பதம் காரணமாக "உணரப்படும் வெப்பநிலை" (Real-Feel Temperature) மிகவும் அதிகமாக இருந்தது. வழக்கமாக மாலையில் குளிர்ச்சியடையும் வேலூர், மதுரை போன்ற உள் மாவட்டங்களில் நள்ளிரவு வரை வெப்பமான சூழலே நிலவியது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கொடைக்கானல் மற்றும் குன்னூர் போன்ற குளிர் பிரதேசங்களிலும்கூட இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவானது.

வெப்ப உயர்வுக்கு முக்கியக் காரணங்கள்

ஜூலை மாதத்தில் நிலவிய இந்த அசாதாரண வெப்ப நிலைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:

  1. பலவீனமான பருவமழையும் எல் நினோவும்: பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ சூழலால் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்தது. இதனால் மேகமூட்டம் குறைந்து நேரடி சூரியவெப்பம் நிலத்தை வந்தடைந்தது.
  2. நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு (Urban Heat Island): நகரங்களில் மரங்கள் குறைக்கப்பட்டு, கான்கிரீட் கட்டிடங்களும் தார்ச் சாலைகளும் அதிகரித்ததால், பகலில் உறிஞ்சப்படும் வெப்பம் இரவிலும் தொடர்ந்து வெளிப்பட்டுப் புழுக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் மாதத்திற்கான கணிப்பு

ஆகஸ்ட் மாத வானிலையைப் பொறுத்தவரை, முதல் பாதியில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் மாதத்திலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil