சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை என்பது தெரிய வந்ததில் இருந்தே, அவருடைய ஆதரவாளர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளது.
தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இது சம்பந்தமாக பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரம் அண்ணாமலை தேர்தலில் போட்டியில்லை என்பதை கட்சி தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டதாக விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் வானதி சீனிவாசன் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் ஒரு தொகுதி
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 இடங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து தொகுதி ஒதுக்கீட்டில் பாஜகவிற்கு இரண்டு தொகுதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வானதி சீனிவாசனும், அண்ணாமலையும் கோவையில் போட்டியிடலாமென்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜகவுக்கு கோவையில் ஒரேயொரு தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கியது.
பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்
அதோடு பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையில் கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என கூறப்பட்டது. கடந்த முறை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் அவர், இந்த முறை வடக்கு தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அண்ணாமலை எடுத்த முயற்சி
இதனிடையில் அண்ணாமலையும் கோவை வடக்கு தொகுதியை பெறுவதற்கு முயற்சி செய்தார். இதனால் குழப்பங்கள் நீடித்த நிலையில், நேற்றைய தினம் வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இது சம்பந்தமாக பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.
உட்கட்சி பிரச்சனை இல்லை
அந்த வகையில் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "சீட் கொடுக்கக்கூடிய இடத்தில் நாங்கள் கிடையாது. எந்த விதமான உட்கட்சி பிரச்சனையும் கிடையாது. எங்களுக்காக பரப்புரை செய்வதாக சொல்லியுள்ளார். பியூஷ் கோயலும் அவருடைய பணி என்னவென்று கூறியுள்ளார்.
டென்ஷனான வானதி சீனிவாசன்
நாளை கோவை வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். அவருடைய பணிகள் ரொம்ப நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. அவரே தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிய பிறகும் எதற்காக இந்த கேள்விகளை கேட்கிறீர்கள் என டென்ஷனாக பதிலளித்துள்ளார் வானதி சீனிவாசன். இதனிடையில் அண்ணாமலை நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை கட்சி தலைமையிடம் கூறிவிட்டேன்.
தனபால் குற்றச்சாட்டு
அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டது மிக்க மகிழ்ச்சி. நான் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யவுள்ளே என தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் தனக்கு சீட் வழங்காமல் அவினாசி தொகுதியை பாஜகவுக்கு கொடுத்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். இதுக்குறித்து தற்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதி என்பது கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.

