கருத்து கணிப்புகள் குறித்து பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் இந்த கருத்து கணிப்புகளை பெரிதாக நம்ப வேண்டாம், இதெல்லாம் கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்கின்றனர்.
ஏனென்றால் அந்தளவிற்கு கருத்து கணிப்புகள் கலவையாக இருக்கின்றன. சில கருத்து கணிப்புகள் திமுகவிற்கும் சில கருத்து கணிப்புகள் அதிமுகவிற்கும் சாதகமாக உள்ளது.
தவெகவிற்கும் சாதகமாக கருத்து கணிப்பு வந்துள்ளது. எனவே கருத்து கணிப்புகளை பெரிதும் நம்ப வேண்டாம் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவதை பார்க்க முடிகின்றது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து கணிப்பு குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியது, கருத்து கணிப்பு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. 2011 ஆம் ஆண்டும் இதே போல் தான் திமுகவிற்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வந்தன.
கடம்பூர் ராஜு
அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக தான் வெற்றிபெறும் என கருத்து கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால் அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தோம். திமுக எதிர்க்கட்சியாக கூட வரவில்லை.எனவே கருத்து கணிப்புகள் குறித்து கவலை இல்லை. ஏப்ரல் 23 ஆம் தேதி மக்கள் தீர்பளித்துவிட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி இன்..முக ஸ்டாலின் அவுட், எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என்ற தீர்ப்பை மக்கள் எழுதிவிட்டார்கள் என்றார் கடம்பூர் ராஜு.
விஜய்யின் தாக்கம்
இதனைத்தொடர்ந்து விஜய் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த தேர்தலில் தவெக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருப்பதாக கருத்துக்கள் வருகின்றன. தவெக கட்சி திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வாக்குகளை சிதறடித்துள்ளது என்றெல்லாம் பேச்சுக்கள் வருகின்றன. இதுகுறித்து பேசிய கடம்பூர் ராஜு, அரசியலுக்கு வந்த எந்த ஒரு நடிகரும் அதிமுக வாக்குகளை பிரித்ததாக சரித்திரம் கிடையாது. எப்போதும் புதிதாக அரசியலுக்கு வரும் கட்சி ஏற்படுத்தும் தாக்கத்தை தான் தவெக தற்போது ஏற்படுத்தியுள்ளது.
தவெக எங்களை பாதிக்காது
புதிதாக கட்சி துவங்கியவரை பார்க்க கூட்டம் திரளும். இதே போல தான் 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கினார். அந்த தேர்தலில் 8 .5 % வாக்குகளை பெற்றார். கருத்து கணிப்புகள் சில அவருக்கு சாதகமாக இருந்தன. ஆனால் அவர் மட்டும் தான் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு எங்களுடன் கூட்டணி வெய்ததற்கான பலனாக எதிர்க்கட்சியாக முன்னேறினார். எனவே எந்த ஒரு புதிதாக துவங்கப்பட்ட கட்சியும் அதிமுகவை பாதித்தது கிடையாது.
சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், டி.ராஜேந்தர், பாக்கியராஜ் என பலர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். ஆனால் யாருமே அதிமுகவின் வாக்கு சதவீதத்தை பாதித்தது கிடையாது. தற்போதும் இதே நிலை தான் தொடரும். நாங்கள் வெற்றிபெறப்போவது உறுதி என்றார் கடம்பூர் ராஜு. இந்நிலையில் அதிமுகவினர் அனைவரும் கருத்து கணிப்புகள் அப்படியே நடந்ததாக சரித்திரம் இல்லை என சொல்லி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக 2011 மற்றும் 2016 தேர்தலை கூறி வருகின்றனர்.
வரலாறு
அந்த தேர்தல்களில் அதிமுக கருத்து கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி மகத்தான வெற்றியை பெற்றதாக குறிப்பிட்டு இம்முறையும் அதே போல அதிமுக ஆட்சிக்கு வரும் என்கின்றனர். மேலும் தவெக வருகை தங்களை ஒருபோதும் பாதிக்காது என அதிமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் சில கருத்து கணிப்புகளில் தவெக இரண்டாம் இடத்திலும் அதிமுக மூன்றாம் இடத்திலும் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நேற்று வெளியான today 's chanakya வின் கருத்து கணிப்பிலும் தவெக இரண்டாம் இடம் பிடிக்கும் திமுக தான் ஆட்சிக்கு வரும் மற்றும் அதிமுக மூன்றாம் இடத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது தான் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். கருத்து கணிப்புகளை எல்லாம் நம்ப வேண்டாம். இதெல்லாம் திமுக நடத்தும் நாடகம்.நாம் இந்த தேர்தலில் வெற்றிபெறப்போவது உறுதி என்றார். தற்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மிகவும் நம்பிக்கையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என சொல்கின்றார்.
இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மறுபக்கம் யாருக்காவது பெரும்பான்மை கிடைக்குமா ? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அந்தளவிற்கு மிகவும் சவாலான தேர்தலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

