ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டது. தலைமையைச் சுற்றிய குழப்பங்கள், உட்கட்சி மோதல்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெளியேறியது போன்ற சம்பவங்கள் கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பின.
இருப்பினும், கட்சியின் அடித்தள அமைப்பும் தொண்டர்களின் ஆதரவும் அதிமுகவை தொடர்ந்து அரசியல் களத்தில் முக்கிய சக்தியாக வைத்திருந்தது.
தவெக ஆட்சிக்குப் பிறகு அதிகரித்த உட்கட்சி அதிருப்தி
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியை அமைத்த பிறகு, அதிமுகவில் அதிருப்தி அதிகரித்ததாகஅரசியல்வட்டாரங்களில் பேசப்பட்டது. சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்தது கவனத்தை ஈர்த்தது. இதனால் கட்சியின் எதிர்கால செயல்பாடு மற்றும் அமைப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் எடப்பாடி பழனிசாமி
இந்தச் சூழலில், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சியின் வலிமை குறித்தும், எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் அவர் பேசிய கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
"அதிமுக ஆலமரம்... சிலர் சென்றாலும் பாதிப்பு இல்லை"
அதிமுக என்பது மாபெரும் ஆலமரம் என்றும், அதிலிருந்து ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லலாம்; அதனால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இங்கு திரண்டுள்ள நிர்வாகிகளைப் பார்த்தாலே அதிமுகவின் வலிமை புரியும் என்றும் அவர் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு, ஆட்சி செயல்பாடு மீது கடும் விமர்சனம்
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்குஅறிவுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு திணறி வருவதாகவும் விமர்சித்தார்.
உள்ளாட்சித் தேர்தலே அடுத்த இலக்கு
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தாம் முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதாகவும், அதேபோல் அதிமுக தலைவர்கள் தமிழக வளர்ச்சிக்காக நிறைவேற்றிய திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பு என்றும் கூறினார்.
"அதிமுகவை அசைக்க முடியாது" - எடப்பாடியின் உறுதி
மேலும், அதிமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்கு சென்றவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்கிறதா என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள் என்றும், அதிமுகவையாராலும் அசைக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார். புதிதாக மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இந்த மாபெரும் இயக்கத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

