தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக தலைவர்கள் இடையிலும் கடுமையான வார்த்தை போர்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக தவெக அமைச்சர் நிர்மல் குமார், திமுக தலைவர்களை விமர்சித்து பேசி வருகிறார். இதற்கு திமுக தரப்பில் இருந்தும் பதிலடிகள் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தவெக அமைச்சர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதாவது தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தவெக அமைச்சர் நிர்மல் குமார் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார். திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரால் தூத்துக்குடியில் வளர்ச்சி பெருகவில்லை. மாறாக ரௌடிசம் தான் பெருகியுள்ளது. அங்குள்ள தொழில் நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை திமுகவினரால் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இந்நிலையில் நிர்மல் குமாரின் இந்த பேச்சுக்கு திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் பதிலடி ஒன்றினை கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், தூத்துக்குடியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் நாகரிகமின்றி பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், என் தந்தையார் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் என்னைப்பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தூத்துக்குடியில் மழை வெல்ல நேரத்தில் யாருமே களத்துக்கு வரவில்லை என்று வாய்க்கூசாமல் பேசியுள்ளார். எம்எல்ஏ, அமைச்சர் என்ற முறையில் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம். அன்றைய துணை முதல்வர், தொகுதியுடைய எம்பி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தினார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பி கூட பார்க்காமல் புறமுதுகை காட்டி ஓடிய நீங்கள் இதைப்பற்றி பேசலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தூத்துக்குடியில் திமுகவினர் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வசூல் செய்வதாக நிர்மல் குமார் பொய்யாக பேசியுள்ளார். அப்படி திமுகவினர் யாரிடமும் வசூல் செய்யவில்லை. ஆனால் வசூல் செய்ததாக கூறும் நீங்கள் அதை நிரூபிக்க முடியுமா? முடியவில்லை என்றால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரின் பதிவில், வாய் மற்றும் அதிகாரம் இருக்கிறது என எதை வேணுமென்றாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தடை கைவிடுங்கள். பல கட்சிகள் மரியா பச்சோந்தி நிர்மல் குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும். இவ்வாறு கடுமையான விமர்சனங்களுடன் தவெக அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கீதா ஜீவன். இதே போன்று அனிதா ராதாகிருஷ்ணனும், அமைச்சர் தன்னுடைய அநாகரிகமான பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளார்.
அரசியல் அறத்திற்கு புறம்பாக அநாகரிகமான முறையில் தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து பேசி வருகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடைய அமைச்சரவையில் பணியாற்றிய என்னை குறித்தும், கீதா ஜீவன் பற்றியும் அநாகரிகமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

