Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பலத்த அடி வாங்கிய பங்குச் சந்தை.. முதலீட்டாளர்களுக்கு 8 லட்சம் கோடி இழப்பு!

பலத்த அடி வாங்கிய பங்குச் சந்தை.. முதலீட்டாளர்களுக்கு 8 லட்சம் கோடி இழப்பு!

Samayam Tamil 1 week ago

ன்று (மே 18) இந்தியப் பங்குச் சந்தைக்கு மிகவும் சாதகமற்ற நாளாக அமைந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் ஒரே நாள் வர்த்தகத்தில் 1 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 74,180 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. இதற்கிடையில், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 23,317 என வீழ்ச்சியடைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளின் குறியீடுகளும் இன்று 2 சதவீதம் சரிவைக் கண்டன. இந்தத் திடீர் பங்குச் சந்தை வீழ்ச்சியின் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு முந்தைய அமர்வில் 461 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 453 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழே சரிந்தது. முதலீட்டாளர்கள் சில மணிநேர வர்த்தகத்தில் 8 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.

வர்த்தக அமர்வின் போது, காலை சுமார் 10:30 மணியளவில் சென்செக்ஸ் 820 புள்ளிகள் சரிந்து 74,410 புள்ளிகளாக இருந்தது. இதற்கிடையில், நிஃப்டி குறியீடு 265 புள்ளிகள் சரிந்து 23,377 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம், மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றம் திடீரென அதிகரித்ததே ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் பரக்கா அணுமின் நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் உலகெங்கிலும் உள்ள சந்தைகளின் மனநிலையை மந்தப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்ற நிலையில் உள்ளன. ட்ரோன் தாக்குதல் மற்றும் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பேரலுக்கு 111 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலகளாவிய பணவீக்கம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாக இருந்தால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயரும். இது நேரடியாக பணவீக்கத்தை அதிகரிக்கும்.

இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதால் விலை உயர்ந்த எண்ணெய் நாட்டின் வர்த்தப் பற்றாக்குறையை அதிகரிக்கிறது. விலை உயர்ந்த எண்ணெய் இந்திய ரூபாயை பலவீனப்படுத்துவதோடு, பெருநிறுவனங்களின் லாபத்தையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய பத்திர வருவாய் ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 96.23 என்ற மிகக் குறைந்த அளவில் முடிவடைந்தது.

இந்த ஆண்டு இதுவரை டாலருக்கு எதிராக ரூபாய் 7 சதவீதம் குறைந்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கியதும், அமெரிக்கப் பத்திர வருவாய் 4.62 சதவீதத்தை எட்டியதும் ரூபாயின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி சந்தைக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டின் இறுதிக்குள் ரூபாய் ஒரு டாலருக்கு 100 என்ற நிலையைத் தொடும் என்று சந்தை வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். வெளிநாட்டு மூலதன வெளியேற்றம் பங்குச் சந்தையில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil