தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்ததை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சில ஆலோசனைகள் மேற்கொண்டார்.
இதனையடுத்து ஆன்மீக பயணமும் செய்தவர் திருச்செந்தூர், சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று பனையூர் அலுவலத்தில் முக்கியமான மீட்டிங்கில் இறங்கியுள்ளார் விஜய். தவெக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அவர் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வெற்றி கழகம்
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த புதிய அரசியல் கட்சியின் வருகை என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பது, 2026 சட்டமன்ற தேர்தல் களத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதனிடையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னமும் மூன்று நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இன்று தவெக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் விஜய்.
பனையூரில் வேட்பாளர்களுடன் ஆலோசனை
இதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்த அவர், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் கருத்து கணிப்பு குறித்து வேட்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் என்னென்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்காக காத்திருப்பேன்.
விஜய்யின் எச்சரிக்கை
அவர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது. அன்றைய தினம் எவ்வளவு நேரமானாலும் பனையூருக்கு வந்து சேர்ந்து விட வேண்டுமென விஜய் கடுமையான எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே எடப்பாடியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், கடைசி நேரத்தில் காணாமல் போனது பரப்பினை கிளப்பியது. தங்கள் வேட்பாளரை பணம் கொடுத்து வாங்கி விட்டதாக ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டினார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதியில் இந்த சம்பவம் நடந்தது அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளானது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை பிற கட்சியினர் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு முயற்சி செய்வதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை தேர்தலில் வெற்றி பெறும் தவெக வேட்பாளர்கள் உடனடியாக பனையூர் வந்து விட வேண்டுமென விஜய் தற்போது அறிவுறுத்தியுள்ளார்.
எக்ஸிட் போல் முடிவுகள்
இதனிடையில் விஜய்யின் வருகையை அறிந்து நீலாங்கரை இல்லம் மற்றும் பனையூருக்கு தவெக தொண்டர்கள் வந்துள்ளனர். தொடர்ந்து பனையூர் அலுவகத்தில் ஆலோசனை நடைபெற, விஜய்யை காண்பதற்காக மரம் மற்றும் சுவரின் மீது ஏறி நின்று தொண்டர்கள் காத்திருப்பில் உள்ளனர். நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் பெரும்பாலான எக்ஸிட் போல் ரிசல்ட்கள் தவெக 10 முதல் 20 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
முதல்வர் ஆலோசனை
மற்றொரு பக்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள் உள்ள தொகுதிகள் பற்றி கேட்டறிந்தவர், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளார். அதே போல் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

