Dailyhunt
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு ஏற்பு. சொத்து விவர சர்ச்சையால் திமுகவினர் எதிர்ப்பு!

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு ஏற்பு. சொத்து விவர சர்ச்சையால் திமுகவினர் எதிர்ப்பு!

Samayam Tamil 2 weeks ago

2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான தலைவர்கள் பலரது மனுக்கள் ஏற்கப்பட்டு வரும் நிலையில், வில்லிவாக்கத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மனைவில் பெயரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் தகவல்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

விஜய் வேட்புமனு ஏற்பு

இதற்கிடையில் பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டு விட்டது. அங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பரிசீலனையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் 6வது மனுவாக தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, அதில் இடம்பெற்று விவரங்களை தேர்தல் அதிகாரி வாசித்து காண்பித்தார். அதன்பிறகு அந்த மனு ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


எதிர்ப்பு தெரிவித்த வேட்பாளர்கள்

உடனே பாமக வேட்பாளர் திலகபாமா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் விஜய் வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மாறி மாறி அளிக்கப்பட்டுள்ளன என்று புகார் தெரிவித்தனர். தேர்தல் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் இடையில் சிறிது நேரம் விவாதம் நடைபெற்றது. முன்னதாக சென்னையில் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கு மற்றும் 2025 மாநாட்டில் பவுன்சர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பான வழக்கு ஆகியவற்றை திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விஜய் சொத்து மதிப்பில் சிக்கல்

அதை பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சேர்க்கும் வகையில் புதிய ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலும் விஜய் பயன்படுத்தும் கேரவன் அவர் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 6 கோடி ரூபாய். இதுவும் விஜய்யின் சொத்து பட்டியலில் சேர்கிறது. இந்த விவரங்கள் சேர்க்காமல் விட்டு விட்டால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதி, புதிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. இதை முன்வைத்தே திலகபாமா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

2026 தேர்தல் முடிவுகளில் ஆட்சி மாற்றம் வருமா?

ஆனால் போதிய ஆவணங்கள் இருப்பதாக கூறி தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது கவனிக்கத்தக்கது. தவெக போட்டியிடும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 1967, 1977 போன்று ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற பெரிய நம்பிக்கையில் தவெகவின் நண்பா, நண்பிகள் காத்திருகின்றனர். இக்கட்சி தலைவர் விஜய்யும் முதல்முறை போட்டியிடுவதால் இரண்டு தொகுதிகளில் களம் காண முடிவு செய்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil