ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த சீசனில், ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங்கில் அனுப்பியப் பிறகு, அவரது இடத்தை நிரப்பாமலே ஐபிஎல் 2026 சீசனில், சிஎஸ்கே விளையாடியது.
இப்படி, ஒரு இடத்தை காலியாக வைத்துக் கொண்டே, சிஎஸ்கே நிர்வாகம், தைரியமாக ஐபிஎல் 2026 சீசனில் விளையாடிய நிலையில், இறுதியில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறினார்கள். இதனால், இந்த பலவீனத்தை சரி செய்ய, தற்போது சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக, டிரேடிங்கில் தரமான இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வாங்கி, பலவீனத்தை சரி செய்ய முடிவு செய்தனர். இதனால், குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தரை வாங்க பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சுந்தருக்கு மாற்றாக சர்பரஸ் கான் அல்லது உர்வில் படேல் இருவரில் ஒருவரை விடுவிக்க தயார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால், வாஷிங்டன் சுந்தரை விடுவிக்க முடியாது என சிஎஸ்கே நிர்வாகத்திடம், குஜராத் டைடன்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதன்பிறகு, சாய் கிஷோர் அல்லது மனவ் சுதாரை கொடுங்கள் என குஜராத் டைடன்ஸிடம், சிஎஸ்கே நிர்வாகம் கேட்ட நிலையில், அதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸில் இருந்து ரிஷப் பந்தை வாங்கி, கேப்டனாக நியமிக்க முடிவு செய்ததால், அக்சர் படேல் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்ததும், அக்சர் படேலை தொடர்புகொண்டு சிஎஸ்கே நிர்வாகம் பேசியது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம் காலியாக இருப்பதால், உங்களுக்கு சிஎஸ்கேவில் முக்கியத்துவம் கிடைப்பது உறுதி என சிஎஸ்கே நிர்வாகிகள், அக்சர் படேலிடம் தெரிவித்துள்ளனர்.
அக்சர் படேலுக்கு சரியான இடம்: இந்திய டி20 அணியில், நிரந்தர இடத்தை பிடிக்க அக்சர் படேலுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சரியான அணியாக இருக்கும். சேப்பாக்கத்தில், ஸ்பின்னர்களால் அபாரமாக பந்துவீச முடியும். இப்படிப்பட்ட பிட்சில் ஆடினால், அக்சர் படேலால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால், அக்சர் படேலுக்கு சிஎஸ்கேவுக்கு சரியான அணியாக இருக்கும்.
சிஎஸ்கே, யாரை விட்டுக்கொடுக்கும்: அக்சர் படேலுக்கு மாற்றாக உர்வில் படேல் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு, டாப் ஆர்டரில் அதிரடி காட்டும் ஒரு பேட்டர் தேவைப்படுகிறார். இதனால், உர்வில் படேல், ராகுல் சஹாரை வாங்கி மாற்றாக அக்சர் படேலை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பந்த், டெல்லி அணியில்: டெல்லி கேபிடல்ஸ் அணி, ரிஷப் பந்தை வாங்கி, மாற்றாக குல்தீப் யாதவை விடுவிக்க முடிவு செய்துள்ளது. லக்னோ அணி நிர்வாகம் அக்சர் படேலைதான் கேட்டிருக்கிறது. ஆனால், அக்சர் படேல் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். அதேநேரத்தில், குல்தீப் யாதவ், லக்னோ அணி செல்ல விரும்பியதால், லக்னோ அணியும் குல்தீப் யாதவை ஏற்றுக் கொண்டுவிட்டதாம். இதனால், விரைவில், ரிஷப் பந்த் டிரேடிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

