தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது சொந்த மாவட்டமான சேலம், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்குப் பதிவினை செய்வதற்காக தனது குடும்பத்துடன் வாக்குச் சாவடிக்கு நடந்தே சென்றார். காலை முதலே வரிசையில் காத்திருந்த பொதுமக்களுடன் இணைந்து நின்ற அவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மிகவும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் காணப்பட்டார்.
கண்டிப்பாக வெற்றி - எடப்பாடி பழனிசாமி
"இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். 100% வெற்றி உறுதி என்று அவர் தெரிவித்தார். தமிழக மக்கள் தற்போதைய ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், அதன் வெளிப்பாடு இன்றைய வாக்குப்பதிவில் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குப்பதிவுக்கு அழைப்பு
"ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. எனவே, மக்கள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி வந்து வாக்களிக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார். சேலம் எடப்பாடி தொகுதியில் எட்டாவது முறையாகப் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமிக்கு, அங்குள்ள தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் எடப்பாடி தொகுதியில் இம்முறையும் சாதனை வெற்றியைப் பெறுவோம் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி தொகுதியில் நீடிக்கும் சர்ச்சை
எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் அருண்ராஜ் களமிறக்கப்பட்டார். பின்னர் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இதையடுத்து, சுயேட்சையாக அத்தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த பிரேம்குமாரை தவெக கட்சித் தலைமை ஆதரவு அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலமாக களமிறங்கும் என்டிஏ கூட்டணி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக, பாரதிய ஜனதா கட்சி (BJP), பாட்டாளி மக்கள் கட்சி (PMK) , அமமுக மற்றும் இதர சில கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைத்துக் களம் இறங்கியுள்ளது. இதுவரை தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக மட்டும் 167 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது; மீதமுள்ள இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 23, 2026 இன்று நடைபெறும் இந்தத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கோட்டையான எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுடன் மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை முன்வைத்து அதிமுக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறவுள்ளது.

