தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒட்டி இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாகும்.
தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சியினர் இன்றைய தினமே தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் எடப்பாடி தொகுதியில் எட்டாவது முறையாக களம் காண்கிறார். அதற்கான வேட்புமனுவை கடைசி நாளான இன்று தாக்கல் செய்துள்ளார். 1989 - ஆம் ஆண்டிலிருந்தே எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி தொகுதியில்
கடந்த காலங்களில் எடப்பாடி தொகுதியின் உட்கட்டமைப்பை நன்கு வலுப்படுத்தியுள்ளார் பழனிச்சாமி. அரசு கலை கல்லூரிகளை அந்த பகுதியில் துவங்கி வைத்துள்ளார். அதன் காரணமாகவே அவருக்கு அங்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் திமுக
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, " மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடரும் என தெரிவித்திருக்கிறார். மேலும் அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக முடக்கி வைத்திருப்பதாகவும் அதிமுக ஆட்சி அமைத்தல் அவை மீண்டும் தொடரும் என தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை அமல்படுத்திய விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் "உதயநிதி ஸ்டாலின் சிபிஎஸ்சி பள்ளி வைத்து நடத்துகிறார், அதில் எந்த மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள். ஆனால் எங்களை குறை சொல்லுவார்கள்" என விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்துபேசிய பழனிசாமி எடப்பாடி சட்டமன்றத் தொகுதி ஒரு முன்மாதிரி தொகுதி எனவும் அவர் பேசியிருக்கிறார்.
அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி 15 -ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அதில் தானும் கலந்து கொள்ள இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் திமுக முன்னெடுத்து வரும் தமிழ்நாடு vs டெல்லி என்ற பிரச்சாரம் குறித்து பேசிய அவர் நடப்பது சட்டமன்றத் தேர்தல் டெல்லிக்கு எதிர் தமிழ்நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என செய்தியாளர்களுடன் அவர் பேசி இருக்கிறார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் விஜய் தனக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என தெரிவிக்கிறார், பழமை வாய்ந்த அதிமுகவை எதிரணியாக முன்னிறுத்தவில்லை இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அவர் அப்படி நினைக்கிறார் என்பதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அதிமுக பல்லாண்டுகளாக மக்களின் நல்மதிப்பினை பெற்ற ஒரு கட்சி. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்பக்கூடிய ஒரு கட்சி எனவும் அவர் பேசியிருக்கிறார்.
கருணாநிதியின் வீட்டுச்சிறை
தொடர்ந்து கருணாநிதி வீட்டுச்சிறை விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மறைந்த முதல்வர் கருணாநிதி இறுதி நாட்கள் குறித்து ஆ.ராசா பேசியிருந்த வீடியோ இந்திய அளவில் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. பத்திரிகை ஊடகங்கள் இது பற்றி எழுதுவது, பேசுவது இல்லை அதனால் தான் நான் இதைப் பற்றி பேச வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது" எனவும் அவர் கூறினார்.

