2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சார களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு மும்முரம் அடைந்துள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் முதல்முறை இடம்பெற்றுள்ள தேமுதிக மீது அதிமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதனால் கோபமடைந்த பிரேமலதா விஜயகாந்த், சற்றுமுன் அதிரடியான ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.
தேமுதிவிற்கு ராஜ்யசபா சீட் - அதிமுக ஒப்பந்தம்
அதாவது, திருவண்ணாமலை கோயிலில் வைத்து எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு வழங்கிய ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு காண்பித்தார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. அப்போது பேசுகையில், தேமுதிகவை பார்த்து அரை பர்சன்ட் ஓட்டு என்று எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். இவர்களுக்கு இத்தனை சீட்டா? என்கின்றனர். உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது? அங்க கருகிற வாசனை தமிழ்நாடு முழுக்க வருகிறது.
பிரேமலதா காட்டிய 2024ல் கையெழுத்திட்ட ஒப்பந்தம்
2011ல் இருந்து 2026 வரை உங்க கூட தானே இருந்தோம். ஒரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி இப்படி எல்லாம் பேசக்கூடாது. இது கண்டிக்கக் கூடிய விஷயம். அவர் கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை இதுவரை நான் வெளியே காட்டியதில்லை. அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கோயிலில் காண்பிக்கிறேன் என்று காண்பித்தார். அதில், 5 எம்.பிக்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக கூறப்பட்டுள்ளது. ராஜ்யசபா சீட்டிற்காக ஆண்டு குறிப்பிடாதது பற்றி பிரேமலதா கேட்டிருக்கிறார்.
அரசியலில் கண்ணியம் வேண்டும்
அதற்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து தற்போது வரை ஆண்டை குறிப்பிடும் வழக்கம் இல்லை. இது வெறும் காகிதம் தான். சொன்ன வார்த்தை தான் முக்கியம். அதை காப்பாற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தற்போது தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக நாங்கள் எங்கே சொன்னோம் என்கிறார். அரசியலில் கண்ணியத்தை கடைபிடித்து இதுவரை காண்பிக்காமல் இருந்தேன். ஆனால் அந்த ஒப்பந்தத்தை காட்ட வேண்டிய நிலைக்கு என்னை அவர் தான் ஆளாக்கி இருக்கிறார். ஐசியூவில் இருந்த கட்சி தேமுதிக என்று எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார்.
ஈபிஎஸ் ஐசியூவிற்கு போகக் கூடாது
மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அவர் ஐசியூவிற்கு போகாமல் இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன் என்றார். முன்னதாக போளூர் தொகுதியில் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த். தேர்தல் பரப்புரைக்கு வந்தால் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேசுங்கள். அதை விட்டு விட்டு குடும்பத்தை இழுத்து கண்ணியக் குறைவாக பேசக் கூடாது. அப்படி செய்தால் இந்த தொகுதி மட்டுமல்ல. தமிழக முழுவதும் விரட்டி அடிக்கப்படுவீர்கள் என்று அதிமுக கூட்டணி கட்சிகளை பார்த்து காட்டமாக பேசினார்.
தேமுதிகவை ஒரு வியூகத்துடன் தான் திமுக கூட்டணிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். விஜயகாந்த் செண்டிமெண்ட்டை வைத்து விஜய் காய் நகர்த்தக் கூடும். அதற்கு கவுண்ட்டர் கொடுக்க பிரேமலதாவை களமிறக்கலாம். கட்சி ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் தேமுதிகவை தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கவும், சில விஷயங்களில் ரகசியதை உடைக்க தயங்க மாட்டார். இது தவெகவிற்கு எதிரான வியூகம் எனக் கருதி கொண்டிருக்க, தற்போது அதிமுக கூட்டணிக்கு எதிராக சரியான அட்டாக் அரசியலை கையிலெடுத்து வருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

