அதிமுகவில் இருந்து பலரும் விலகி ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் சாரை சாரையாக இணைந்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையில் இன்றைய தினம் அதிமுகவை சார்ந்த இரண்டு விஜயபாஸ்கர்கள் தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். இது சம்பந்தமாக பல விதமான விமர்சனங்களை தமிழக வெற்றி கழகம் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவை சார்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருவது குறித்து காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
இன்றைய தினம் அதிமுகவை சார்ந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டார்கள். இது சம்பந்தமான விழா சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இரண்டு விஜயபாஸ்கர்களும் இணைந்தனர். முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை.
இதனிடையில் சி. விஜயபாஸ்கர் குட்கா உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் பல உள்ளன. அதே போல் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குகள் உள்ளன. இவர்களை தவெகவில் இணைத்து கொண்டு விஜய் எப்படி ஊழல் இல்லாத ஆட்சியை தருவார் என பலரும் விமர்சனங்களை முன்வைக்க துவங்கியுள்ளனர். இப்படியாக தமிழக வெற்றி கழகத்தில் விஜயபாஸ்கர்கள் இணைந்தது சம்பந்தமாக பல எதிர்மறை விமர்சனங்களை தவெக எதிர்க்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம், அதிமுகவினர் தவெகவில் இணைந்து வருவது தொடர்பாக விமர்சனம் ஒன்றினை முன்வைத்துள்ளார். அதில், எங்கள் கொடியிலும் கட்சியிலும் ஒட்டியிருந்த அழுக்கு கறை இப்போது துடைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதே அழுக்கு கறைகள் தற்போது தவெக கொடியிலும், அதன் கட்சியில் ஒட்டத் துவங்கியுள்ளது போல தெரிகிறது. அதிமுக தற்போது தன்னை சுத்திகரித்து திருத்தி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தவெக அதற்கு மாற்றாக முன்பு எதிர்த்த அதே பிரச்சனைகளுடன் தொடர்புபடத் துவங்கியுள்ளது. வெட்கக்கேடு என கடுமையான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார். அதே போல் தன்னுடைய மற்றொரு பதிவில் மாற்றத்தை வாக்குறுதியாக அளித்த தவெக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசியல்வாதிகளை இணைத்து கொள்வது என்பது மக்களுக்கு தவறான சக்தியை அளிக்கிறது.
தவெகவை நம்பி உழைக்கும் நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அதே நேரம் சர்ச்சைக்குரிய பின்னணி கொண்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. மக்கள் எதிர்பார்த்த தூய்மையான அரசியல் இது அல்ல என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு தொடர 2023 நவம்பர் 13 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிபிஐக்கு அனுமதி அளித்தார். சுமார் ரூ. 39.91 கோடி லஞ்ச பரிவர்த்தனை தொடர்பான அடிபடையில் சிபிஐ விசாரணை மேற்கொன்ட்டடு. இந்த அனுமதி உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறுகின்றன. இப்படியான நிலையில் தவெக கட்சியின் மேடையில் இவ்வாறான அரசியல்வாதிகளை வரவேற்பது, மக்கள் எதிர்பார்த்த மாற்று அரசியலும் ஒத்துப்போவதாக தெரியவில்லை. இவ்வாறு அடுக்கடுக்கான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

