நேற்றைய தினம் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக 73 இடங்களில் வெற்றி பெறும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
இதனிடையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் தோல்வியை தழுவியுள்ளார். இதன் காரணமாக திமுக சார்பில் சட்டமன்றத்துக்கு யார் எதிர்க்கட்சி தலைவராக செல்வார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
அதாவது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் இந்த தேர்தல் முடிவுகளை நீங்க எப்படி பார்க்குறீங்க என கேட்டதற்கு, நீங்க எப்படி பார்க்குறீங்க. நீங்க எப்படி பார்க்குறீங்களோ, அப்படித்தான் நானும் பார்க்கிறேன் என சிரித்துக் கொண்டே சொன்னார். தொடர்ந்து மக்கள் என்ன தீர்ப்பு கொடுத்தாங்களோ, அதை மதிக்கிறோம், ஏற்கிறோம். தலை வணங்குகிறோம். எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை கட்சி தலைவரும், பொதுச்செயலாளரும் முடிவு பண்ணுவார்கள் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர்
அதன்பின்னர் அவரிடம் 2016 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்லப்படுது. அது மாதிரி நீங்க செயல்படுவீங்களா என கேட்டதற்கு, உங்களோட யூகங்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும். எங்களோட சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவர், எதிர்கட்சி தலைவர் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள் என பதிலளித்துள்ளார். இதனையடுத்து திமுக சுயபரிசோதனை செய்ய வேண்டிய நிலை வந்துள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி
அதற்கு திமுக பார்க்காத வெற்றியும், தோல்வியும் கிடையாது. எப்பவுமே சுயபரிசோதனை செய்ய வேண்டியது தேவை. இப்போ மக்கள் எடுத்து இருக்கிற முடிவை பார்ப்போம். எப்படி ஆட்சி அமைய போகிறது என்பதை பார்க்கலாம். எதுக்காக இவ்வளவு அவசரம் எனவும் பதிலளித்து விட்டு கிளம்பி விட்டார் உதயநிதி ஸ்டாலின். இவர் கடந்த முறை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் இரண்டாவது முறையாக போட்டியிட்டார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் 62,992 வாக்குகள் பெற்று வெற்றி வேட்பாளராகியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிட்ட டி. செல்வம் என்பவர் 55,852 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு சென்றார். அதிமுக வேட்பாளரான ஆதிராஜாராம் 16,507 வாக்குகளுடன் மூன்றாமிடம் பெற்றார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மை பெறாத தவெக
இது அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இதனிடையில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்காக தவெக சார்ப்பில் இருந்து ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் வழங்கும்படி கேட்டு, தற்போது ஆட்சி அமைப்பதற்கு கேட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் 7 ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையில் திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசு அமையும் வரை முதலமைச்சராக தொடரும்படி ஆளுநர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

