சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெளியிடும் அறிக்கைகளை கவனித்தால் அது முந்தைய கால அறிக்கைகளை விட முற்றிலும் மாறுபட்ட அறிக்கைகளாகவே காணப்படுகின்றன.
இந்த திடீர் மாற்றம் எங்கிருந்து வந்தது? இந்த மாற்றம் அந்த தலைவர்களுக்கு ஏன் தேவைப்பட்டது? என்பது போன்ற நிறைய கேள்விகள் எழுந்து வருகின்றன.
இன்ஸ்டாவால் தவெக ஆட்சியமைத்ததாக கருத்து
மு.க. ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலரும் தவெகவின் வெற்றிக்கு முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் தான் காரணம் என்று தற்போது வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இளம் தலைமுறையினரே (Gen Z) அதிகம் காணப்படுகின்றனர். அவர்களை கவர்ந்து தான், அவர்களின் மூலம் அவர்களின் குடும்பத்தையும் கவர்ந்து தவெக ஆட்சி அமைத்து விட்டதாக திமுகவினர் கருதுகின்றனர்.
திமுக அறிக்கைகளில் மாற்றம்
இவ்வளவு நடந்தும் கூட முதலமைச்சர் விஜய்யை, திமுகவினர் மீண்டும் தவறாகவே எடை கணக்கு போட்டு வருகின்றனர் என்று சமூக வலைதளங்களில் பேசுவதை காண முடிகிறது. முன்பே கூறியது போல, இன்ஸ்டாகிராம் மூலம் விஜய் ஆட்சியைப் பிடித்ததாக குற்றம் சாட்டும் திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தங்களது அறிக்கைகளில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
Gen Z-க்களை கவர முடிவு
ஆங்கிலம் கலந்த பேச்சுக்கள், பேச்சு மொழி, கொச்சைத் தமிழ் என மூன்றும் கலந்த கலவையாக அறிக்கைகளை வெளியிடுகின்றனர். அப்போதுதான் இளம் தலைமுறையை (Gen Z) கவர முடியும் என்று நினைக்கிறார்கள் போல. தங்களுக்கு பாடம் கற்பித்த இளம் தலைமுறையை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகின்றனவோ என்ற சந்தேகமும் பொது பார்வையில் எழுந்திருக்கிறது.
பத்திரிகையாளர் கருத்து
'பேச்சு மொழியிலோ கொச்சைத் தமிழிலோ இப்படி அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருந்தால், தமிழ் நாசமாகத்தான் போகும். அறிக்கைகளுக்கு பெயர் போன அண்ணா, கலைஞர் கருணாநிதி வாரிசுகள் அல்லவா நீங்கள்? நீங்கள் இந்த மொழி பானியை தேர்வு செய்திருப்பது கண்டிப்பாக நன்மைக்கு அல்ல' என்று பத்திரிகையாளர் ஜேம்ஸ் மார்க் பீட்டர் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
உரைநடை தமிழ் அறிக்கைக்கு கோரிக்கை
திராவிட சித்தாந்தம் கொண்டவர்களே, இப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சரை வழிநடத்துவது ஏற்கத்தக்கதா? அதே பாணியில் முதலமைச்சரும் பதில் கூறினால் அவமானம் யாருக்கு மிஞ்சும்? என்ற கேள்விகளும் எழத் தொடங்குகின்றன. எனவே பேச்சுத் தமிழில் அறிக்கைகள் வெளியிடுவதை தவிர்த்து விட்டு, உரைநடை தமிழில் அறிக்கைகளை வெளியிடுமாறு மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கோரிக்கைகளும் எழுகின்றன.

