சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக விஜய்யின் தவெகவை அதிமுக ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பினை கிளப்பியுள்ளது. தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியாத என்ற நிலையில் உள்ளது. இதனையடுத்து அமைச்சரவையில் பங்கு என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என அதிமுகவை சார்ந்த சில நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இன்று காலையில் எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சி.வி. சண்முகம், வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளார். அமைச்சரவையில் பங்கு என்ற நிலைப்பாட்டுடன் தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என இபிஎஸ்ஸிடம் அவர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது. இது அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
அதே நேரம் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் மாறுப்பட்ட கருத்து அதிமுக நிர்வாகிகள் இடையில் நிலவி வருகிறது. கே.பி. முனுசாமி, இன்பதுரை, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் இந்த ஆலோசனைக்காக இபிஎஸ் இல்லத்துக்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு குழு தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம் சி.பி. சண்முகத்துடனான ஆலோசனைக்கு பின்னர் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் எந்த விதமான ஆலோசனையும் நடக்கவில்லை. சும்மா ஆபீஸ்க்கு வந்துட்டு போறோம். வேற எதுவும் இல்லை என பதில் அளித்தார். அதோடு சிவி சண்முகமும், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையில் தற்போது அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடந்து வருவது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் முடிவில் மூன்றாம் இடத்தினை அதிமுக பெற்றுள்ளது. ஆளுங்கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் வெறும் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவினர் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தவெகவுடன் இணைய அதிமுகவை சார்ந்தவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இணைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்து ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். அமைச்சரவையில் பங்கு, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் தவெகவுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது. இது அரசியல் களத்தில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் ஐந்து எம்எல்ஏக்கள் கிடைத்தாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு இன்னும் சில எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனையடுத்து விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் ஆதரவையும் தவெக நாடியுள்ள நிலையில், அவர்கள் இன்னமும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கின்றனர். இதனிடையில் தற்போது அதிமுகவும் தவெகவை ஆதரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

