தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக உள்ளது. இங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றமும் காலியாகவுள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இநிலையில் கரூர், விராலிமலை தொகுதிகளில் ராஜினாமா செய்தமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாஸ்கர்கள் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளது.
தவெக தலைவரான இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூரை தக்க வைத்து திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். அதே போல் அதிமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களின் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். தற்போது வரை 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தனர்.
இதனையடுத்து ராஜினாமா செய்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் விசில் சின்னத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் வெங்கடாசலபதி என்பவர் தொடர்ந்த வழக்கில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் காரணத்தால் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென விராலிமலை, கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான விஜயபாஸ்கர்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. இருவரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விராலிமலை சி. விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்த தவெக வேட்பாளர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யவில்லை. மாறாக திமுக வேட்பாளர் செல்லப்பாண்டி தான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எனவே நீதிமன்றம் அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. மேலும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளே எம்எல்ஏ பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். அதனால் இடைத்தேர்தல் நடத்த அனுமதித்தால் எந்த சிக்கலான சூழலும் வர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதே போன்று கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்பட கூடாது.
எனவே இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்குகளில் விசாரணை வரும் ஆகஸ்ட் 24 ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முக்கிய முகமாக இருந்தவர்கள் கரூரை சார்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலையை சார்ந்த சி. விஜயபாஸ்கர். இவர்கள் இருவரும் தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.
இதனையடுத்து இருவரும் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியது. குறிப்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, இப்படி பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையலாமா என அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இடைத்தேர்தல் தடையை நீக்கக்கோரி விஜயபாஸ்கர்கள் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

