இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 201/7 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி, 11.4 ஓவர்களில் 76/10 ரன்களை மட்டும் எடுத்து படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. முதல் முறையாக இந்திய அணி, 100+ ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்குமுன், 2019ஆம் ஆண்டில், நியூசிலாந்துக்கு எதிராக 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுதான், மோசமான சாதனையாக இருந்தது.
இப்படி, படுதோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசியுள்ளார். அதில், ''இது மிக மோசமான தோல்வி என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இது, 200 ரன்களை அடிக்க கூடிய பிட்ச் கிடையாது. பிட்ச், பௌலர்களுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணி பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். பேக் ஆப் லெந்தை பயன்படுத்தி பந்துவீசியிருந்தால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்'' என ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
அதாவது, குட் லெந்திற்கும், ஷார்ட் பிட்சிற்கும் இடையில் இருக்கும் லெந்த்தான், பேக் ஆப் லெந்த். அந்த லைன், லெந்தில் தொடர்ச்சியாக பந்துவீசியிருந்தால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதுதான் ஷ்ரேயஸ் ஐயரின் கருத்தாக இருக்கிறது.
மேலும் பேசிய ஷ்ரேயஸ் ஐயர், ''பேட்டிங்கிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பவர் பிளே முடிவதற்குள் 5 விக்கெட்களை இழந்துவிட்டால், பிறகு எப்படி வெல்ல முடியும். 202 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடும்போது, பொறுப்புடன், அணிக்கு தேவையான வகையில் விளையாடியிருக்க வேண்டும்'' என ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.
இந்திய டி20 அணி, டாப் ஆர்டரில் இருக்கும் பேட்டர்கள் அனைவரும், காட்டடி அடிக்கும் பேட்டர்களாக இருக்கிறார்கள். இவர்கள், பிட்ச் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்ப்பது கிடையாது. எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கிறதா, ஸ்விங் இருக்கிறதா என்பதை கூட பார்க்கலாம், தொடர்ச்சியாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் எண்ணத்திலேயே பேட்டை விடுகிறார்கள். இந்தியாவில், தார் ரோடு பிட்ச், 50 மீட்டர் பவுண்டரி பிட்சில் விளையாடுவதுபோல் எண்ணி, தொடர்ச்சியாக பவுண்டரி, சிக்ஸருக்கு முயற்சிக்கிறார்கள்.
சிங்கில், இரண்டு ரன்கள் ஓடி எடுத்தால், அதை கௌரவ குறைச்சலாக எண்ணுவதுபோல்தான் தெரிகிறது. இதனால்தான், முதல் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்த பிறகும் கூட, நிதானமாக ஆடாமல், தொடர்ச்சியாக பெரிய ஷாட்டிற்கு முயற்சித்து, இந்திய பேட்டர்கள் அவுட் ஆகியிருக்கிறார்கள்.
இந்திய டி20 அணி, குறைந்த ஸ்கோரில் ஆல்அவுட் ஆவது, இதுதான் 2ஆவது முறை. 2008ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 74 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆன நிலையில், தற்போது 76 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆகியிருக்கிறார்கள். அடுத்து, 2016ஆம் ஆண்டில், நியூசிலாந்துக்கு எதிராக 79 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது, மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
வரலாற்று தோல்வி: இந்திய டி20 அணி, 4 போட்டிகளுக்கு மேல் தொடர்ச்சியாக வெல்லாமல் இருந்தது கிடையாது என்ற ரெக்கார்ட் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகள், இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் என 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

