நாட்டிங்கம்மில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், இங்கிலாந்துக்ககு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர் பிலிப் சால்ட் 44 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், ஜாஸ் பட்லர் 36 (21), சாம் கரண் 41 (24) ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டதால், இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 201/7 ரன்களை குவித்து அசத்தியது.
இந்திய அணி தரப்பில், பிரின்ஸ் யாதவ், 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இந்திய அணி இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், எந்த பேட்டரும் 13 ரன்னை தாண்டவில்லை. ஓபனர் வைபவ் சூர்யவன்ஷி 13 (5), இஷான் கிஷன் 13 (9) ஆகியோர் அடித்ததுதான் பெரிய ஸ்கோரை இருந்தது. அபிஷேக் சர்மா 10 (7) ரன்களை சேர்த்தார்.
கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 5 (4), அக்சர் படேல் 10 (4), திலக் வர்மா 3 (11) ஆகியோரும் படுமோசமாக சொதப்பினார்கள். இதனால், இந்திய அணி 11.4 ஓவர்கள் முடிவில் 76/10 ரன்களை மட்டும் எடுத்து, 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில், இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.
1. ஸ்பின்னர்கள் சொதப்பல்: இந்திய டி20 அணியின் பலமே ஸ்பின்னர்கள்தான். ஸ்பின்னர்கள் சொதப்பும் பெரும்பாலான போட்டிகளில், இந்திய அணி தோல்வியைதான் சந்திக்கிறது. தற்போது, அக்சர் படேல், 4 ஓவர்களில் 49 ரன்களையும், வருண் சக்ரவர்த்தி, 3 ஓவர்களில் 35 ரன்களையும் வாரி வழங்கி சொதப்பினார்கள். இந்த 2 பௌலர்கள் மட்டும் சேர்ந்து, 7 ஓவர்களில் 84 ரன்களை கசியவிட்டதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
2. பிட்ச் கணிப்பு இல்லை: ஓபனர்கள் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு சிங்கில் எடுத்து ஆடும் பழக்கம் இல்லை. அடிச்சா பவுண்டரி, சிக்ஸர்தான் என்ற மனநிலையில்தான் ஆடுகிறார்கள். இதனால், எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளையும் சரியாக கணிக்காமல், தொடர்ச்சியாக பெரிய ஷாட்டிற்கு முயற்சிக்கும்போது அவுட் ஆகிவிடுகிறார்கள். கடந்த 2 ஆவது போட்டியிலும் இதே தவறை செய்த நிலையில், தற்போது மூன்றாவது போட்டியிலும் இதே தவறை செய்து சொதப்பியுள்ளனர்.
3. பார்ட்னர்ஷிப் இல்லை: அபிஷேக் 10 (7), சூர்யவன்ஷி 13 (5), இஷான் கிஷன் 13 (9) ஆகிய டாப் ஆர்டர் பேட்டர்கள் அவுட் ஆனப் பிறகு, மிடில் விணை பேட்டர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. குறிப்பாக, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடவில்லை. சொல்லப் போனால், இந்திய மிடில் வரிசை பேட்டர்களை, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆட விட முடியாத அளவுக்கு, இங்கிலாந்து பீல்டிங் அபாரமாக இருந்தது. இதுவும், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
தற்போதுவரை, இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

