அதிமுகவில் இருந்து பலர் தவெக பக்கம் செல்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் கடந்த மாதம் தான் அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார்.
இப்படி அதிமுகவில் இருந்து பலர் தவெகவில் இணைவதால் குதிரை பேரம் நடந்திருக்குமோ என்ற குற்றசாட்டு முன் வைக்கப்படுகின்றது. திமுகவும் அதிமுகவும் தவெக மீது குதிரை பேரம் குற்றசாட்டை வைக்கின்றனர். இதுகுறித்து தவெகவை சேர்ந்த பலர் தங்களின் கருத்துக்களை கூறி பதிலடி தந்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுகவினர் தவெகவில் இணைவது குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 47 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க நினைத்தார். அதனை உண்மையான அதிமுகவின் தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த மிகப்பெரிய சூழ்ச்சியை அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரும்பவில்லை.
உதயநிதி ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கூட்டணி அமைக்க திட்டமிட்டனர். இதனை சிவி ஷண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் எதிர்த்தார்கள். எப்படி நீங்கள் 47 எம்எல்ஏக்களை வைத்து முதலமைச்சராக முடியும் ? மக்கள் உங்களை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இருக்கின்றனர். மக்களின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் முதலமைச்சராக முயற்சித்து இருக்கின்றீர்கள். இதுபோன்ற சூழ்ச்சி பிடிக்காத அதிமுகவினர் தவெக பக்கம் வருகின்றனர்.
எங்களுடன் இணைய வரும் அவர்களை நாங்கள் அன்போடு அழைத்துக்கொள்கின்றோம். நாங்கள் எந்த ஆஃபரும் அவர்களுக்கு வழங்கவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்குள் 90 % அதிமுகவினர் தவெகவிற்கு வருவார்கள். அதிமுகவின் தலைமை மீது அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருந்தனர். அது பிடிக்காத காரணத்தினால் தான் அவர்கள் தவெகபக்கம் வருகின்றனர்.
நாங்கள் எந்த ஒரு ஆஃபரும் அவர்களுக்கு வழங்கவில்லை எனஆதவ் அர்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் தவெகவிற்கு ஆதரவு வழங்கிய எஸ்.பி வேலுமணி தரப்பு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசமாக பேசி அதிமுகவில் இணைந்தார்கள். ஆனால் சிவி ஷண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்னும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாகவே தெரிகின்றது.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமா ? என்ற ஆலோசனையில் அவர்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதுகுறித்து தங்களது ஆதரவாளர்களுடன் சிவி ஷண்முகம் மற்றும் விஜய பாஸ்கர் பேசி வருகிறார்களாம். விரைவில் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள் என தெரிகின்றது. ஒருவேளை அவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதா ? என்ற கேள்வியும் எழுகின்றது.
ஏற்கனவே தவெகவில் அதிமுகவினர் பலர் அடுத்தடுத்து இணைந்து வரும் நிலையில் தற்போது சிவி ஷண்முகம் மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோரும் இணைவார்களா ? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இந்நிலையில் அதிமுகவினர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதால் தவெக மீது குதிரை பேரம் குற்றசாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன் வைக்கின்றனர். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளக்கம் அளித்து பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

