பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்: கார் பந்தயங்களில் கலந்து கொண்டு உலக அரங்கில் அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்று வரும் அஜித் குமாருக்கு இன்று 55 வயதாகிவிட்டது.
உழைப்பாளர்கள் தினத்தன்று பிறந்த கடின உழைப்பாளியான அஜித் குமார் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், தொடர்ந்து மனதிற்கு பிடித்ததை செய்து சந்தோஷமாகவும் வாழ பலரும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் குமாரின் பிறந்தநாளையொட்டி மதுரையை சேர்ந்த ரசிகர்கள் அடித்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது அரசியல் பக்கம் வர மாட்டேன் எனும் அஜித்தை போய், வா தல வா என அரசியலுக்கு அழைத்து போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அஜித் குமாராவது, அசியலுக்கு வருவதாவது, அது மட்டும் நடக்க வாய்ப்பே இல்லை.(தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.)
6.54 மணிக்கு அதாவது வாக்குப்பதிவு துவங்க 6 நிமிடங்களுக்கு முன்பே அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதால் வாக்களித்தார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் வாக்கை அவர் பதிவு செய்தார். அத்துடன் அவரின் அரசியல் தொடர்பு முடிந்துவிட்டது. இனி அடுத்து தேர்தல் வரும்போது திருவான்மியூர் வாக்குச்சாவடியில் கண்டிப்பாக வரிசையில் நிற்பார் அஜித் குமார்.
இதற்கிடையே அஜித் ஜாதகத்தில் அவருக்கு முதல்வர் ஆகும் யோகம் இருப்பதாக விஜய்யின் ஜோதிடர் ரதன் பண்டிட் தெரிவித்தது வைரலாகிவிட்டது. முன்பே அவர் தெரிவித்த விஷயம் குறித்து தற்போது பேசப்படுகிறது. அது மட்டும் அல்ல தமிழக முதல்வராக இருந்தவர்களின் ஜாதகத்தை விட சிறப்பானதாக இருக்கிறது அஜித் குமாரின் ஜாதகம் என அவர் கூறியிருக்கிறார். ஜாதகத்தில் யோகம் இருந்தாலும் அஜித் குமாருக்கு அரசியலில் விருப்பம் இல்லை.
அஜித் நடிக்கும் படங்கள்: கெரியரை பொறுத்தவரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க ஒப்புக் கொண்ட ஏ.கே. 64 படத்தின் ஷூட்டிங் எப்பொழுது துவங்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிப்ரவரி மாதமே படப்பிடிப்பு துவங்கப்படும் என்று ஆதிக் தெரிவித்த நிலையில் இன்னும் துவங்காமல் இருக்கிறது.
அஜித் குமாரோ வரும் ஜனவரி மாதம் வரை கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார். அது குறித்த அட்டவணை வெளியானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர ரேஸராகிறார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் தனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த திரையுலகை விட்டு அவர் விலகவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் படம் மட்டும் அல்ல சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். மங்காத்தாவை அடுத்து மீண்டும் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி சேர்வதால் பட வேலை துவங்கும் முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இதற்கிடையே ஏ.கே. 64 படத்தை சிறுத்தை சிவாவை இயக்கச் சொல்லியிருக்கிறார் அஜித் குமார் என தகவல் வெளியானது. விசாரித்துப் பார்த்தபோது தான் அந்த தகவல் வெறும் வதந்தி என்பகு தெரிய வந்தது.

