Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இவர்களின் வானம் எப்போது விடியும்... இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை!

இவர்களின் வானம் எப்போது விடியும்... இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை!

Samayam Tamil 7 months ago

ந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு அடையாளத்துடனே பயணப்பட்டு கொண்டு இருக்கிறான். அதிலும் தான் பிறந்த மண் மூலம் கிடைக்கப்படும் பிரஜை என்கிற அடையாளம் தான் அனைவரும் சமமாக சுமந்து கொண்டு இருக்கும் உரிமை.

ஆனால் பிறந்த மண்ணிலும் உரிமை இல்லாமல், தஞ்சம் புகுந்த மண்ணிலும் எந்தவித உரிமையும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கிறது ஒரு கூட்டம். தான் பிறந்த மண்ணிலே அகதியாக்க பட்ட இலங்கை தமிழர்கள் தங்களின் உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, உறவுகளை இழந்து எஞ்சி இருக்கும் உணர்வோடும் உயிரோடும் கடல் தாண்டி சென்றனர்.

அப்படி உயிரை கையில் அள்ளி பிடித்து கொண்டு இந்தியா வந்தவர்களின் வானம் இன்னும் விடியவே இல்லை. 40 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்தும் கூட அவர்களுக்கு இன்று வரை குடியுரிமை வழங்கப்படவே இல்லை. இன்னும் சொல்ல போனால் இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழர்களுக்கு கூட குடியுரிமை வழங்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை. அவர்கள் எதிகொள்ளும் சிக்கல்கள் என்ன என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்?

இலங்கை தமிழர்கள் யாரும் படிப்பு மீது ஆர்வம் காட்டுவதே இல்லை. அவர்களின் அதிகப்பட்ட படிப்பே 10ஆம் வகுப்பு தான். ஏன் ஆர்வமில்லை என்ற கேள்விக்கு விடை தான் அந்த குடியுரிமை. அவர்கள் எந்த படிப்பு படித்தாலும் அவர்களால் எந்த நிறுவனத்திலும் பணி புரிய இயலாது. சட்டமோ, மருத்துவமோ, பொறியியல் என எது படித்தாலும் அது சார்ந்து அவர்களால் வேலை செய்ய முடியாது. சட்டம் படிக்கலாம் ஆனால் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது. அதே போல் எந்த தனியார் நிறுவனங்களிலும் அவர்களால் பணி புரிய முடியாது. எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கையை நீடித்துக் கொள்ள பெயிண்டிங் வேலைக்கு செல்கின்றனர். பெரும்பாலான ஆண்கள் பெயிண்டிங் தொழிலிலும் பெரும்பாலான பெண்கள் தையல் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை இல்லாததால் தான் இவர்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 62 சதவீத இலங்கை தமிழர்கள் வேலையற்றவர்களாக உள்ளனர். மேலும் அவர்கள் படும் துன்பங்களை பற்றியே கண்ணீருடன் விவரித்தனர்.

மீனை பிடிக்க கற்றுத் தாருங்கள்

தற்பொழுது புழல் முகாமில் வசித்து வரும் தேவதாஸ் இது குறித்து பேசுகையில், "1990ஆம் இலங்கையில் இருந்து தனி ஆளாக கோடியக்கரைக்கு வந்து பின் மண்டபம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டேன். இங்கு உணவு, உடை, பேச்சு வழக்கு என எல்லாம் வேறுபட்டது. அன்பாக அனுசரித்து கொண்ட அதே மக்கள் எங்களை கேலியாகவும் பார்த்தனர். கிடைத்த வேலைகள் எல்லாம் செய்தேன். பின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் முகாமிற்கு மாற்றப்பட்டேன். அதன் பிறகு தான் என் குடும்பத்தை அழைத்து கொண்டு வந்தேன். கட்டு நாய் வாழக்கை வாழ்ந்து வருகிறோம். நாயை வாங்கி கட்டி வைத்து சோறு போடுவது போல முகாமிற்குள் அடைக்கப்பட்டு எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது. மீனை தின்ன பழக்கமால், பிடிக்க கற்று தாருங்கள். இந்த அரசு எங்கள் மீது நலன் அற்ற அன்பு கொண்டுள்ளது" என்று வருத்தத்துடன் பேசினார்.

நாங்களும் இந்தியர்கள் தான்

இது குறித்து கொண்டம் முகாமில் வசிக்கும் சபீனாஸ்ரீ பேசுகையில், "நான் 2004இல் இங்கு தான் பிறந்தேன். எங்களை ஒவ்வொரு இடத்திலும் அகதி என்று குறிப்பிட்டு கொண்டே இருக்கின்றனர். நாங்க அகதி இல்ல. நான் இந்த நாட்டுல தான் பிறந்தேன். நானும் இந்தியன் தான். தமிழ்நாடு அரசு கூட இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கை மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றி உள்ளது. நான் கபடி, கைப்பந்து, ஏறி பந்து, கோ கோ என எல்லாமும் விளையாடுவேன். என்னால் மாவட்டத்தை தாண்டி விளையாட முடியாது. எனக்கு இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது பெரும் கனவு. நாங்கள் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அனுமதி வாங்க வேண்டும். எனவே நானும் மாவட்ட ஆட்சியராகி என் மக்கள் படும் கஷ்டத்தை துடைக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எங்களால் அரசு பணிகளுக்கு செல்ல முடியாது என்பது பின்பு தான் தெரிந்தது" என்று வேதனையும் தெரிவித்தார்.

முகாமிலையே முடியும் எங்களின் வாழ்க்கை

இது குறித்து கும்மிடிப்பூண்டி முகாமில் இருக்கும் கலைமதி பேசுகையில், "அரசு வேலை, மருத்துவம், சட்டம் என எதுவும் எங்களுக்கு இல்லை. வண்டி கூட எங்கள் பெயரில் வாங்க முடியாது. ஆனால் இப்பொழுது அது மாற்றப்பட்டு எங்கள் பெயரில் வண்டி வாங்கலாம். ஆனால் அதிலும் இலங்கை அகதி என்று குறிப்பிட்டு தருகின்றனர். நான் கிரிக்கெட், இறகு பந்து நல்லா விளையாடுவேன். துணை முதல்வர் கையால் பரிசு கூட வாங்கி உள்ளேன். ஆனால் என்னால் அந்த கட்டத்தை தாண்டி போக முடியவில்லை. எங்களின் வாழ்க்கை இந்த முகாமில் முடிந்து விடுகிறது" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.

சமமான காற்றை தடையின்றி சுவாசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய மண்ணில் பிறந்தவர்களுக்கும் இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களுக்கும் அரசாங்கம் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil