அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தான் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மதுரை வந்திருக்கிறார்.
நாளை புதுச்சேரியில் நடக்கவிருக்கும் மக்கள் பரப்புரையிலும் மற்றும் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று இரவு சென்னை வரவிருக்கிறார். இதனை முன்னிட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இன்றைய தினம் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ஊழல் மலிந்த திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றுவோம் என பேசி இருக்கிறார். மேலும் பாஜக அதிமுக கூட்டணி ஒரு குடும்பமாக செயல்படுகிறது எனவும், அதிமுகவை விட்டு திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார். ஜெயலலிதாவின் முதுகில் குத்தி விட்டார் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதிமுக - பாஜக கூட்டணி நிலைப்பாடு
கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கூட்டணி அமைத்திருந்தாலும் பாஜக - அதிமுக கூட்டணி களத்தில் ஒன்றிணையவில்லை என சொல்லப்பட்டது. இருப்பினும் சமீபகாலமாக கூட்டணி ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர் அமளிகளுக்கு இடையில் அதிமுக - பாஜக தனது கூட்டணியை இறுதி செய்தது.
இந்த கூட்டணியில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் தற்போது இணைந்துள்ளது. மேலும் இந்த மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு பலமுறை வரவிருக்கிறார்.
இந்த சூழலில்தான் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் அதிமுக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவார் என்றும் சொல்லப்பட்டது.
அதிமுக - பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது
தமிழகத்தில் அதிமுகவிற்கு பாரம்பரியமான வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் நிச்சயம் அந்த வாக்கு வங்கியை சிதைக்கும் என சொல்லப்பட்டது. இது பாஜகவிற்கும் ஆபத்தான ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த சூழலில் அதிமுக - பாஜக வெற்றி வாய்ப்பை தாண்டி எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே தற்போது முக்கியமானது என்கின்றனர் சில விமர்சகர்கள்.
மேலும் சில முக்கிய நகரங்களில் பாஜக வலுவிழப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக சென்னையில் வட சென்னை தவிர பிற இடங்களில் அதிமுக தனது வாக்கு வங்கியை இழக்க கூடும் எனவும் சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொங்கு மண்டல பகுதிகளை தவிர பெரும்பான்மையான இடங்களில் அதிமுக கட்சி ரீதியாக வலுவிழக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகள் 2021 -ஆம் ஆண்டே திமுகவிடம் சென்றுவிட்டது. போதாக்குறைக்கு பாமக மீது ஒரு நம்பிக்கையற்ற சூழலே நிலவுகிறது. மேலும் பாஜக கேட்கும் தொகுதிகள் அதிமுகவிற்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. கோவில் தொகுதிகளை குறிவைக்கும் பாஜக கடந்த தேர்தலில் அதிமுக வென்ற இடங்களையும் கேட்பதாக சொல்கிறது. இந்த இக்கட்டான சூழலில் கட்சியை காப்பாற்றவாவது எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் வென்றாக வேண்டும் என்கின்றனர் சில விமர்சகர்கள்.

