தொடர்ந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக நாளை முதல் பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என தெரிவித்ததாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி அளித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் பணியாளர் முன்னேற்ற சங்கம், மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம், தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சங்கம், டாஸ்மார்க் தொழிலாளர் விடுதலை முன்னணி, தமிழக பாட்டாளி டாஸ்மாக் தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு டாஸ்மார்க் அரசு பணியாளர் நல சங்கம், மேற்பார்வையாளர்கள் சங்கம், அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் டாஸ்மாக் சங்கம் உள்ளிட்ட சங்கங்களோடு இன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்,
தமிழக அரசு அறிவித்த 717 கடைகளில் தற்பொழுது வரை 462 கடைகள் மூடப்பட்டுள்ளது. வரும் வாரத்திற்குள் மீதமுள்ள கடைகள் மூடப்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சில பகுதிகளில் மது பாட்டில்களை திரும்பி பெறுவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் போராடி வருகின்றனர். தமிழக அரசுக்கும் மது பாட்டில்களை எங்கிருந்தாலும் எடுத்து வைக்க வேண்டியது என்பதில் உறுத்தல்தான் இருக்கிறது. மாற்று வழிகளை மேற்கொள்கிறோம் எனக் கூறியிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்று வழிமுறையை ஏற்படுத்த ஒரு மாத கால அவகாசம் வேண்டும் அதற்குள்ளாக சரி செய்வோம் என அறிக்கை வாயிலாகவும் நேற்று தெரிவித்திருந்தோம் என கூறிய விக்னேஷ், கள சூழல்களையும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், டாஸ்மாக் தொழிலாளாளர்கள் நிச்சயமாக அரசு மீது நம்பிக்கை உள்ளது என்றார்கள் தொழிலாளர்கள் மீது அரசுக்கும் நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக இந்த ஒரு மாத காலத்திற்குள் இந்த பிரச்சினைகளை சரி செய்யப்படும் எனக் கூறியிருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று நிச்சயமாக அனைத்து தொழிலாளர்களையும் நாளை முதல் பணிக்கு திரும்ப செல்லுமாறு அறிவுறுத்துவோம் எனக் கூறியிருக்கிறார்.
இந்த பிரச்சனை காரணமாக பல கடைகள் மூடப்பட்டிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அது அனைத்தும் சரியாகிவிட்டது என்றார்.
717 கடைகளில் 462 கடைகள் தற்பொழுது வரை மூடப்பட்டுள்ளது. வரும் வாரத்திற்குள் மீதமுள்ள கடைகள் மூடப்படும். 717 கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாத ஊதியம் நிச்சயமாக சென்று விடும். மேலும் மூடப்பட்ட கடைகளுக்கு அருகாமையில் உள்ள அதிக அளவில் விற்பனையாகும் கடைகளுக்கு மூடப்பட்ட கடைகளின் பணியாளர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதற்கு முன்னதாக நடந்த கூட்டத்தில் காலி மதுபானப் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை (Buy back system) தனி பணியாளர் பிரிவை ஏற்படுத்தி செயல்படுத்தும் காலம் வரை, கடைகளில் இதற்காக அமர்த்தப்படும் கூடுதல் பணியாளர் , அவருக்கு கூலி கொடுப்பது, திரும்ப வரும் மதுபான பாட்டில்கள் இருப்பு வைத்திருக்கும் இடத்திற்கான வாடகை ஆகிய வகைகளில் ஏற்படும் செலவுகளை நிர்வாகம் ஏற்க வேண்டும் என ஊழியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

