கருப்பு சூர்யா: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பசாமியாக நடித்த கருப்பு படம் பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக மே மாதம் ரிலீஸானது.
த்ரிஷா கிருஷ்ணன், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் வழக்கறிஞர்களாக நடித்த அந்த படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டரானது. ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சூர்யா ஆகியோரின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக ஆகிவிட்டது கருப்பு.
அந்த வெற்றிக்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், எடிட்டர் கலைவாணன், ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு ஆகியோருக்கு கார் வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சூர்யா. இந்நிலையில் கருப்பு கொடுத்த வெற்றியால் சூர்யா 49 படத்தில் இருந்து ரூ. 100 கோடி சம்பளம் வாங்குவது என்று முடிவு செய்திருக்கிறார் சூர்யா என கூறப்படுகிறது.
சூர்யா 100 கோடி: புது சம்பள விபரத்தை சூர்யா தரப்பில் இருந்து இதுவரை உறுதி செய்யவில்லை. இருந்தாலும் சூர்யாணாவுக்கு தாராளமாக ரூ. 100 கோடி கொடுக்கலாம் என்கிறார்கள் அன்பான ரசிகர்கள்.
மே மாதத்தை அடுத்து ஆகஸ்ட் மாதம் எப்பொழுது வரும் என சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படம் ஆகஸ்ட் மாதம் தான் திரைக்கு வருகிறது. கையில் குழந்தையுடன் வெளியான விஸ்வநாத் அன்ட் சன்ஸ் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே இம்பிரஸ் ஆகிவிட்டார்கள். படம் எப்பொழுது தான் வரும் என்று காத்திருக்கிறார்கள்.
சூர்யா படங்கள்: விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படம் மூலம் முதல் முறையாக சூர்யா உடன் சேர்ந்து நடித்திருக்கிறார் மமிதா பைஜு. சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பட வேலையை முடித்த பிறகு ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். தற்போதைக்கு சூர்யா 48 என அழைக்கப்படும் அந்த படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. கே.ஜி.எஃப்., காந்தாரா ஆகிய படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவன தயாரிப்பில் சூர்யா படம் உருவாகவிருப்பதால் அது மீது தற்போதே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
சூர்யா, அரசியல்: ஜெய்பீம் எனும் படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஞானவேல் மற்றும் சூர்யா மீண்டும் சேர்ந்து படம் பண்ணுவதாலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. படங்கள் உண்டு, அகரம் அறக்கட்டளை உண்டு, குடும்பம் உண்டு என்று இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாக அண்மையில் தகவல் வெளியாகி தீயாக பரவியது.
சூர்யா நற்பணி இயக்க கூட்டத்தில் கலந்து கொண்ட வீரமணி என்பவர் நடிப்பின் நாயகன் மக்கள் தலைவர் ஆகப் போவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசினார். அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லித் தான் பேசினார். இருந்தாலும் அது சூர்யாவின் கருத்து என பேச்சு கிளம்பவே நற்பணி இயக்கம் சார்பில் விளக்கம் அளித்தார்கள்.

