கேரளாவில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது. அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உட்பட நிறைய சத்துக்கள் உள்ளது.
அதனை பயன்படுத்தி கேரளா ஸ்டைலில் ருதியான மீன் குழம்பை எப்படி தயார் செய்வது என்பதை இங்கு பாருங்கள்.
கேரளா, அசைவ உணவுக்கு பெயர்பெற்ற மாநிலமாகும். அங்குள்ள கடற்கரை பகுதிகளில் அனைத்து வகையான மீன்களும் எளிதாக கிடைத்தாலும், மத்தி மீனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், நிறைய ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.
பிற மீன்களை விட விலை குறைவாக இருப்பதால், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் கூட சமைப்பார்கள். மத்தி மீனை பயன்படுத்தி குழம்பு, வறுவல் என விதமான உணவுகளை சமைப்பார்கள். இதில் மத்தி மீனை பயன்படுத்தி குழம்பு எப்படி தயார் செய்யும் வழிமுறையை பார்க்கலாம்.பிற மீன்களை விட மத்தி மீன் ஏன் சிறந்தது?

மத்தி மீனில் வைட்டமின் டி, புரோட்டீன், கால்சியம், நல்ல கொழுப்பு, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் உள்ளன. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியான ஆய்வறிக்கைபடி, மீன் மாத்திரையை விட மத்தி மீனை சாப்பிடுவது உடலுக்கு கூடுதல் பலன்களை அளிக்கிறது. அதன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நாள்பட்ட வீக்கத்தை குறைப்பதோடு நீரிழிவு, ஹைப்பர்டென்ஷன் போன்ற நோய் அபாயங்களை தடுக்க உதவும்.
மத்தி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

- மத்தி மீன் - அரை கிலோ
- எண்ணெய் - தேவையான அளவு
- பூண்டு - 10
- இஞ்சி - 2 இன்ச்
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - சிறிதளவு
- சின்ன வெங்காயம் - கால் கிலோ
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- தக்காளி - 100 கிராம்
- மீன் குழம்பு மசாலா - 3 டீஸ்பூன்
- மஞ்சள் - அரை டீஸ்பூன்
- புளி - எலுமிச்சை சைஸ்
- உப்பு - தேவையான அளவு
மத்தி மீன் குழம்பு செய்முறை

- முதலில் மத்தி மீனை சுத்தம் செய்து தனியாக வைத்துகொள்ள வேண்டும்.
- பிறகு, பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் நசுக்கிய பூண்டு, துருவிய இஞ்சி, ப.மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் கிளற வேண்டும்
- தொடர்ந்து நன்றாக தட்டிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பிரட்ட வேண்டும். வெங்காயம் மென்மையாக வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். சுமார் 5 நிமிடம் மிதமான தீயில் கிளறவும். அப்போது தான் சுவையும் நிறமும் குழம்புக்கு கிடைக்கும்.
- அடுத்து, மசித்த தக்காளி, மீன் குழம்பு மசாலா, மஞ்சள் சேர்த்து வதக்க வேண்டும். 1 முதல் 2 நிமிடங்கள் கிளறினால் போதுமானது.
- இதற்கிடையில், புளியை நீரில் ஊறவைத்து நன்றாக கரைத்து சாற்றை வடிகட்டி எடுத்துகொள்ளவும்.
- இப்போது வதக்கிய மசாலாவில் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கரைத்து எடுத்த புளித்தண்ணீரை சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் அளவை சரியான அளவில் ஊற்ற வேண்டும்.
- பிறகு குழம்புக்கு தேவையான நீரை ஊற்றிக்கொள்ளலாம். சுமார் 3 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பிறகு மீனை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.
- 10 நிமிடங்கள் திறந்து வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மிதமான தீயில் 5 நிமிடங்கள் பாத்திரத்தை மூடி கொதிக்க வைக்கவும். குழம்பு கிளறுவதை தவிர்க்க வேண்டும்.
- இறுதியாக கறிவேப்பிலை தூவி சூடான சாதத்துடன் பரிமாற செய்யலாம். இதனை இட்லி, தோசை அல்லது மரவள்ளிக்கிழங்கு கூடவும் பரிமாறினாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்.
மீன் குழம்பு ருசியாக செய்ய டிப்ஸ்

- மீன் குழம்பை ஸ்டீல் பாத்திரங்களில் சமைப்பதை விட மண் சட்டியில் சமைத்தால் ருசி அட்டகாசமாக இருக்கும்.
- சின்ன வெங்காயத்தை நறுக்கி போடுவதை தவிர்க்க வேண்டும். கேரளா ஸ்டைலில் செய்ய விரும்பினால் இடி உரலில் தட்டி சேர்க்கவும்
- காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பது குழம்புக்கு கூடுதல் சுவையை தரக்கூடும். 1 டீஸ்பூன் சாதாரண மிளகாய் தூள், 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்கலாம்.
- 2 அல்லது 3 கொதிநிலை வந்ததும் மீனை சேர்க்க வேண்டும். அப்போது நன்றாக மசாலா சேர்த்து ருசி கிடைக்கும்.
- மீன் குழம்பை கரண்டி வைத்து கிளறவிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
வாரம் 2 முறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும், எலும்புகள் வலுவாகும், மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள டிப்ஸை பின்பற்றி ருசியான மத்தி மீன் குழம்பை வீட்டிலேயே தயார் செய்து ருசித்து மகிழுங்கள்.

