தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் விஜயின் தமிழக வெற்றி கழகம் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு புதிய கட்சிக்கு இந்தளவு ஆதரவு கிடைத்துள்ளது அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளது கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் இங்கு வெற்றிவாகை சூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக காலையில் தபால் வாக்குகள் எண்ணிய சமயத்தில் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த வாக்கு சுற்றுகளில் பின்தங்க ஆரம்பித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவர் பின்தங்கிய நிலையில், திமுகவினர் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர்.
எப்படியாவது இறுதியில் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வெற்றியை பதிவு செய்வார் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியாக தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக களமிறங்கிய வி.எஸ். பாபுவிடம் தோல்வியை தழுவினார். இது அரசியல் களத்தில் பலர் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியை அடைய செய்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி வாகை சூடினார்.
கடந்த முறை கொளத்தூரில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர் ஆனார். இந்நிலையில் இந்த முறை தோல்வியை தழுவியுள்ளார். முன்னதாக 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, பர்கூர் தொகுதியில் 1996 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். அவருக்கு பின்பாக தற்போது முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். இதனிடையில் அவருடைய தோல்வி குறித்து சோஷியல் மீடியாவில் திமுகவினர் பலவிதமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வாரம் ஒருமுறை சென்று கொண்டு வந்தார். அங்கு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்யவும் செய்தார். இதனால் கொளத்தூர் தொகுதியை தனது பிள்ளையை போன்று பார்த்த மு.க. ஸ்டாலினை தோற்கடித்து விட்டீர்களே என திமுகவினர் பலரும் அதிருப்தி தெரிவித்து கொண்டிருக்கின்றனர். அதோடு கொளத்தூர் தொகுதிக்கே என்றே பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.
இப்படியான நிலையில் அவருடைய தோல்வி ஏற்க முடியாத ஒன்று என பெரும் சோகத்துடன் திமுகவினர் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரம் மாற்றம், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறையினர் விருப்பம் போன்ற அடிப்படையில் வி.எஸ். பாபு கொளத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சோஷியல் மீடியாவில் பதிவுகளை காண முடிகிறது. இதனிடையில் மு.க. ஸ்டாலின் தோல்வி குறித்து நடிகரும், அரசியல் விமர்சகருமான பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில், வணக்கள் தமிழ்நாடு என குறிப்பிட்டு காமராஜர் தோற்றார். தற்போது மு.க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ரசிகர் மயமாக சமூகம் மாறியுள்ளது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி எப்போதும் எதிர்க்கட்சி தான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களுடைய மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

