வேப்பம்பூ ரசம், நார்த்தங்காய் ரசம் ஆகியவை மழைக்காலத்தில் சுவையுடன் உடலுக்கு ஊட்டச்சத்தையும் தரும் பாரம்பரிய உணவுகள்.
அவற்றின் நன்மைகள் மற்றும் செய்முறை பார்க்கலாம்.
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே சளி, இருமல், காய்ச்சல் மற்றும் செரிமான போன்ற நோய்த்தொற்றுகள் நம்மை எளிதாக தாக்கக்கூடும். இச்சமயத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் பாரம்பரிய சமையலில் இருக்கும் சிறந்த உணவுதான், ரசம்.
சாதாரண ரசத்தை விட, கிருமிநாசினிப் பண்புகள் நிறைந்த வேப்பம்பூ மற்றும் பித்தத்தை தணிக்கும் நார்த்தங்காய் ரசம் இந்த மழைக்கால நோய்களுக்கு அருமருந்தாகும். நாவின் சுவையை தூண்டும் இந்த இருவகை ரசங்களையும் கசப்பில்லாமல் எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.வேப்பம்பூ ரசம் தேவையான பொருட்கள்

- வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
- புளி - எலுமிச்சை சைஸ்
- பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்
- ரசப்பொடி - 1 டீஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 1
- வர மிளகாய் - 2
- நெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
வேப்பம்பூ ரசம் எளிய செய்முறை

- முதலில் கடாயில் நெய் விட்டு சூடானதும் வேப்பம்பூவை போட்டு வறுக்க வேண்டும். அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- இதற்கிடையில் தண்ணீரில் புளியை சேர்த்து ஊறவைத்து அதன் சாற்றை தனியாக பிழிந்து எடுத்துகொள்ளவும்
- இப்போது கடாயில் புளிக்கரைசல், வெல்லம், ரசப்பொடி, தக்காளி மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்
- 10 முதல் 12 நிமிடங்கள் பிறகு அடுப்பை அணைத்துவிட்டும் வறுத்த வேப்பம்பூவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்
- மற்றொரு கடாயில் நெய் விட்டு உருகியதும் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து தாளித்தும், ரசத்தில் சேர்க்க வேண்டும். அவ்ளோதான், ருசியான வேப்பம்பூ ரசம் ரெடி
நார்த்தங்காய் ரசம் தேவையான பொருட்கள்

- நார்த்தங்காய் - 1
- தக்காளி - 1
- ப.மிளகாய் - 1
- மஞ்சள் - கால் டீஸ்பூன்
- வெல்லம் - 1 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- கொத்தமல்லி - சிறிதளவு
அரைப்பதற்கு
- கடுகு - 1 மற்றும் அரை டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வர மிளகாய் - 1
தாளிக்க
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - அரை டீஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு
நார்த்தாங்காய் ரசம் செய்முறை

- முதலில் நார்த்தங்காயை இரண்டாக வெட்டி, மெதுவாக பிழிந்து அதன் சாற்றை தனியாக எடுத்துகொள்ளவும்.
- அடுத்து மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்
- இப்போது நறுக்கிய தக்காளியை தண்ணீரில் போட்டு கைகளால் முடிந்தவரை மசிக்கவும். இந்த தண்ணீரில் பச்சை மிளகாய், மஞ்சள், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
- மற்றொரு கடாயில் கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துவிட்டு, ரசத்தில் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்
- அதன் மேலே கொத்தமல்லி இலைகளை தூவிவிட்டு, பிழிந்து வைத்துள்ள சாற்றை சேர்த்து நன்றாக கலக்கினால் ரசம் ரெடி.
குறிப்பு: நார்த்தங்காய் பழுத்திருந்தால், புளிப்புத்தன்மை குறைவாக இருக்கும். எனவே, பழுக்காத நார்த்தங்காயை தேர்ந்தெடுப்பது நல்லது.
அறிவியல் ஆய்வு சொல்வது என்ன?

National Library of Medicine-ல் வேப்பமரம் குறித்து வெளியான ஆய்வின்படி, அதன் பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட பயோ-ஆக்டிவ் கூறுகள் உள்ளன. இருப்பினும், இதுகுறித்து மேலும் மனித ஆய்வுகள் தேவை என தெரிவிக்கப்படுகிறது.
NIH-ல் வெளியான மற்றொரு ஆய்வின்படி, நார்த்தங்காய் போன்ற சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் C மற்றும் அதில் உள்ள இயற்கை நோய் எதிர்ப்பு சத்துக்கள், உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, மழைக்காலத்தில் உடலுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை தீவிரமாக பாதுகாக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

