குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில், ஓபனர் விராட் கோலி 13 பந்தில் 28 ரன்களை எடுத்தார்.
குறிப்பாக, காகிசோ ராபாடாவுக்கு எதிரான, ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் 21 ரன்களை குவித்து அசத்தினார்.
இப்படி, 28 ரன்களை அடித்ததன் மூலம், ஐபிஎலில் இந்திய மண்ணில் 8000 ரன்களை அடித்த முதல் வீரராக விராட் கோலி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இப்போட்டிக்கு முன், 231 இன்னிங்ஸில் 7,988 ரன்களை கோலி எடுத்திருந்தார். தற்போது, 28 ரன்களை எடுத்து, இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
தகர்க்குறது ரொம்ப கஷ்டம்: முதல் இடத்தில் இருக்கும் கோலி 8,016 ரன்களை அடித்த நிலையில், இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 237 இன்னிங்ஸில் 6,274 ரன்களை எடுத்திருக்கிறார். ஷிகர் தவன் 187 இன்னிங்ஸில் 5,819 ரன்களையும், டேவிட் வார்னர் 164 இன்னிங்ஸில் 5,689 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 181 இன்னிங்ஸில் 4,958 ரன்களையும் எடுத்துள்ளனர்.
கடந்த போட்டியில்தான், விராட் கோலி ஒட்டுமொத்த ஐபிஎலில் 9,000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
குஜராத் டைடன்ஸுக்கு எதிரான இப்போட்டியில், ஆர்சிபி அணி 155 ரன்களை மட்டுமே அடித்தது. நடப்பு சீசனில், முதல் முறையாக ஆல்அவுட் ஆகியிருக்கிறார்கள். இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 15.5 ஓவர்களில் 158/6 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
சேஸிங்கில் அசத்தும் குஜராத் டைடன்ஸ் அணி: குஜராத் டைடன்ஸ் அணி, இதுவரை 39 போட்டிகளில் சேஸ் செய்து, அதில் 26 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. 13 போட்டிகளில் தோல்வியை சந்தித்தனர். வெற்றி சதவீதம் 66.67 சதவீதமாக இருக்கிறது. 2022ஆம் ஆண்டு முதல், சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்ட அணிகளில், குஜராத் டைடன்ஸ் அணிதான் முதல் இடத்தில் இருக்கிறது.
ஐபிஎலில் குஜராத் டைடன்ஸ் அணி, சேஸிங்கில் பெற்ற 2ஆவது பெரிய வெற்றியாக இந்த வெற்றி இருக்கிறது. 2023ஆம் ஆண்டில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளை மீதம் வைத்து வெற்றியைப் பெற்றது. தற்போது, 25 பந்தில் வெற்றியைப் பெற்றுள்ளனர். நடப்பு சீசனில், சிஎஸ்கேவுக்கு எதிராக 20 பந்துகளை மீதம் வைத்து வெற்றியைப் பெற்றனர்.
குஜராத் டைடன்ஸ் அணி, நடப்பு சீசனில், 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்த 5 வெற்றிகளில், 4 வெற்றிகள் சேஸிங்கின்போது கிடைத்தது. ஒரு போட்டியில் மட்டும், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக முதலில் களமிறங்கி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றனர்.
ஆர்சிபி அணி, 9 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ளனர். எஞ்சிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றாலே ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். குஜராத் அணி, எஞ்சிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால், இனி பிளே ஆப் ரேஸ் சூடுபிடிக்கும். குறிப்பாக, முதல் இரண்டு இடங்களை பிடிக்க தீவிர போட்டி இருக்கும்.

