அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவை பார்த்து வளர்ந்தவன் என்பதால், அவருடைய மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற அடிப்படையில் தாய்மாமன் சீர் கொண்டு சென்றேன் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சீமானுக்கு இரண்டாவது குழந்தை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது மகள் பிறந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது குழந்தைக்கு முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொந்தங்களும் நட்பும் சூழ சீர் வரிசை எடுத்துச் சென்றார்.
நேற்று முழுக்க பெரும்பாலான சமூக தளங்களில் இந்த செய்தியே பேசுபொருளாக இருந்தது. மேலும் மேளதாள வாத்தியங்கள் முழங்க, அனைத்து வகையான சீர் வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக சீமான் வீட்டிற்கு அனிதா ராதாகிருஷ்ணன் சென்று இருக்கிறார்.
நெகிழ்ச்சி காட்சி
அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாசலில் காத்திருந்து அவரை வரவேற்று அழைத்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் சீமானை பார்த்தவுடன் சால்வை அளித்து அவரைக் கட்டி தழுவினார். மேலும் சீமானின் குழந்தைக்கு தங்க செயின் அணிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளர். இந்த அன்பான காட்சியை பார்த்து அனைவரும் மகிழ்ச்சியான கமெண்ட்களை பதிவிட்டு இருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல் விழியை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது அவருக்கு இரண்டாவது மகள் பிறந்திருக்கிறார். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரான சீமானுக்கு பிரமுகர்களும், திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தான் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் "தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பக்ரீத் பண்டிகைக்கு மாடு வெட்ட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது, இதையெல்லாம் த. வெ.கவுக்கு வாக்களித்த இஸ்லாமியர்கள் உணர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பேசுகையில், இஸ்லாமியர்கள் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், கனிமவளங்களை தமிழக பயன்பாட்டிற்காக ரசீதுடன் கொண்டு செல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார், மேலும் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவை பார்த்து வளர்ந்தவன் என்பதால், அவருடைய மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற அடிப்படையில் தாய்மாமன் சீர் கொண்டு சென்றேன் என விளக்கமளித்திருந்தார்.

