தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், செம்மொழியான தமிழ் மொழி நமக்கு தாய்மொழியாக இருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என தெரிவித்தார். தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும், நடைமுறை மொழியாகவும், பேச்சு மொழியாகவும் தமிழ் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் ஏற்கனவே சட்ட ரீதியான மொழி
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் ஏற்கனவே சட்ட ரீதியான மொழியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.
தமிழில் வழக்குகளை நடத்துவதற்கான உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பது, தமிழ்மொழியின் பயன்பாட்டை நீதித்துறையிலும் மேலும் விரிவுபடுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
348(2) விதியின் கீழ் தனித் தீர்மானம்
இந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவின் உட்பிரிவு 2-ஐ பயன்படுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ் மொழி நிர்வாகம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டில் மட்டுமின்றி, நீதித்துறையிலும் முக்கிய இடத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்துள்ள இந்தத் தனித் தீர்மானம் அரசியல் மற்றும் சட்டத்துறையில் கவனம் பெற்றுள்ளது.

