Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னையில் மீண்டும் தட்டம்மை அச்சம்: அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பது எப்படி? குழந்தை நல மருத்துவர் விளக்கம்

சென்னையில் மீண்டும் தட்டம்மை அச்சம்: அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பது எப்படி? குழந்தை நல மருத்துவர் விளக்கம்

Samayam Tamil 1 week ago

சென்னையில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்தத் தொற்று எளிதில் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை குழந்தை நல மருத்துவர்வேல்முருகன் கண்ணப்பன் கூறியதாவது, "தட்டம்மை என்பது காற்றின் மூலம் மிகவும் எளிதாக பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்று. கதவுப் கைப்பிடி, பொம்மைகள் மற்றும் மேஜைகள் போன்ற மேற்பரப்புகளை தொடுவது மூலமாகவும் பரவலாம். சில நேரங்களில் தட்டம்மை பாதிக்கப்பட்டவர்களை கவனித்தல் அல்லது ஒரே பாத்திரத்தை பயன்படுத்துவது மூலமாகவும் பரவ செய்யலாம்" என்கிறார்.

கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்

வைரஸ் உடலுக்குள் சென்ற 10 முதல் 14 நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உடலில் தெரிய ஆரம்பிக்கும்.

  • அதிக காய்ச்சல்
  • தொடர் இருமல் மற்றும் சளி
  • கண்கள் சிவந்து நீர் வடிதல்
  • உடல் சோர்வு
  • வாயின் உட்புறத்தில் சிறிய வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றுதல்
  • தடிப்புகள் முகத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவக்கூடும்

குறிப்பு: ஒருவருக்குத் தட்டம்மை தொற்று இருந்தால், உடலில் தடிப்புகள் தோன்றுவதற்கு 4 நாட்களுக்கு முன்பே அவர் மற்றவர்களுக்கு வைரஸ் பரப்ப தொடங்கிவிடுவார்.

மருத்துவர்கள் எச்சரிக்கும் பாதிப்புகள்

சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் தட்டம்மை உயிருக்கே ஆபத்தான சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர் வேல்முருகன் எச்சரிக்கிறார்.

  • நிமோனியா
  • கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு
  • காது தொற்று
  • அரிய நிகழ்வில் மூளை வீக்கம் ஏற்படுதல்


எந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க செய்யலாம்?

தட்டம்மை வேகமாக பரவ தொடங்கியுள்ளதால், கூட்டமான மற்றும் காற்றோட்டம் குறைவான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் தட்டம்மை வைரஸ் பல மணி நேரம் உயிர் வாழக்கூடியது.

  • பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் டே-கேர் சென்டர்
  • அவசியமில்லாமல் மருத்துவமனை செல்வது
  • பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து
  • திரையரங்குகள், வணிக வளாகங்கள்
  • திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
  • பூங்கா மற்றும் ஜிம்

தட்டம்மை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிகள்

தட்டம்மையைத் தடுக்க MMR (Measles, Mumps, Rubella) தடுப்பூசி மிகவும் அவசியம். குழந்தைகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதை உறுதி செய்யுங்கள்.

  • கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்
  • கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள்.
  • அறிகுறிகள் உள்ளவர்களை தனி அறையில் வைத்து பராமரிக்க வேண்டும்
  • காய்ச்சல் மற்றும் தடிப்புகள் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்

சென்னையில் தட்டம்மை பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வும், சரியான நேரத்தில் போடப்படும் தடுப்பூசியுமே மிகச்சிறந்த வழிமுறை என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மருத்துவ நிபுணர் ஆலோசனை

இக்கட்டுரை, சென்னை ரேலா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நலன் மற்றும் குழந்தை மருத்துவ மூத்த ஆலோசகர் Dr.வேல்முருகன் கண்ணப்பன், சமயம் தமிழுக்கு அளித்த தகவலின்பேரில் எழுதப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil