தமிழ்நாட்டில் தவெக தலைமையில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளது. சமீபத்தில் தோழமை கட்சிகளுடன் கூட்டம் ஒன்றினை தமிழக வெற்றி கழகம் நடத்திய நிலையில், அதில் கூட்டணி சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விரைவில் தவெக தலைமையில் கூட்டணி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஜுன் 1 ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தோழமை கட்சிகளுடன் கூட்டம் ஒன்றினை நடத்தியது. இதில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக கட்சிகள் பங்கேற்றன. அதே நேரம் இடதுசாரி இயக்கங்களான சிபிஎம், ஐபிஐ கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. தவெகவின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவினை எடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே போல் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை.
இவர்களை தவிர்த்து பிற தவெக தோழமை கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் புதிய கூட்டணி அமைப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய், தோழமை கட்சிகளை சார்ந்த தலைவர்கள் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அதோடு இந்த புதிய கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மூத்த அனுபவம் வாய்ந்த தலைவர் இந்த கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டதாம்.
இந்நிலையில் தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை ஒருங்கிணைபாளராக நியமிக்கலாம் என முதல்வர் ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ள ப. சிதம்பரம் நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அவர் தவெக புதிய கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டால் சரியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ப. சிதம்பரத்தை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்வதில், காங்கிரஸ் மாநில தலைவரான மாணிக்கம் தாகூருக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. அதே போல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருங்கிணைப்பாளர் பதவியை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறாராம். இதனால் தவெகவின் புதிய கூட்டணிக்கு யார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதனிடையில் தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் மூன்று விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். கூட்டணிக்கு கமிட்டி அமைப்பது, பொதுவான செயல்திட்டம் ஒன்றை வைப்பது குறித்தும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக கூட்டணிக்கு பெயர் வைப்பது சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார். அதோடு விரைவில் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் புதிய கூட்டணிக்கு முதல்வர் ஜோசப் விஜய் பெயர் ஒன்றினை முடிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்த தவெக கூட்டத்தில் இது சம்பந்தமாக முடிவெடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

