சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனிடையில் சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் நிலையில், தொடர்ந்து அவை நேரத்தினை இதுபோன்று சண்டை போட்டு வீணடிப்பதாகவும், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்து பேசப்படுவதில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இப்படியான நிலையில் நேற்றைய தினம் குடியாத்தம் தொகுதி தவெக எம்எல்ஏ சிந்து முன்வைத்த கோரிக்கை வெகுவாக பலரையும் கவர்ந்தது. அதோடு பலத்தரப்பில் இருந்து பாராட்டுக்களையும் பெற்றது.
சாட்டை துரைமுருகன் பதிவு
அதாவது, தனித் தொகுதி என்பதை சிறப்புத் தொகுதி அல்லது உரிமைத் தொகுதி என குறிப்பிட வேண்டுமென பேசியிருந்தார். அவருடைய இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவரின் இந்த பேச்சினை திமுக மற்றும் பிறக்கட்சியை சார்ந்தவர்கள் கூட பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன், தவெக எம்எல்ஏவின் கோரிக்கை குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
நாதக சீமான் கருத்து
அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து தனித்தொகுதி என்ற சொல்லை மாற்றி சிறப்பு அல்லது உரிமைத் தொகுதி என அழைக்க வேண்டுமென வைத்த கோரிக்கை மிக முக்கியமானது. இதனை பலமுறை நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமான் முன்மொழிந்துள்ளார். அதே கருத்து இன்று சட்டசபையில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரால் பேசப்படுவது மகிழ்ச்சி. இவ்வாறு தவெக எம்எல்ஏவின் கோரிக்கை குறித்து தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார் சாட்டை துரைமுருகன்.
தவெக எம்எல்ஏ சிந்து கோரிக்கை
முன்னதாக இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சிந்து பேரவையில் பேசுகையில், தனித்தொகுதி என்ற சொல் எனக்கு வர கடிதங்களில் கூட பிரக்கட்டில் தனித்தொகுதி என்று வருகிறது. தனி என்ற சொல் புழக்கத்தில் பாகுபாடு, ஒரு தண்டனை மாதிரி வகையில் குறிக்கிறது. உதாரணத்திற்கு அந்த பெண்ணை தனியாக வையுங்கள். அவனை தனிமைப்படுத்துங்க. சிறையில் அடையுங்க என்பதை போன்று குறிக்கிறது.
ரிசர்வேஷனுக்கு நேரடியான அர்த்தம் தனி கிடையாது. ஆர்டிக்கிள் 333 மற்றும் 332-வில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு உரிமை வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்பெஷல் தொகுதி என குறிப்பிடலாம். எனவே தனி என்ற சொல்லை நீக்கி சிறப்பு அல்லது உரிமை என மாற்றி கொடுக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அதோடு தமிழில் ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்ற தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.
சபாநாயகர் அளித்த பதில்
இதனையடுத்து அவருடைய கோரிக்கையை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லலாம். நல்ல முடிவு எடுக்கலாம் என்று பதில் அளித்தார் சபாநாயகர். அவருடைய இந்த பேச்சு வெகுவாக பாராட்டுக்களை அள்ளி வருகிறது. ஏற்கனவே சட்டமன்றத்தில் கன்னிப்பேச்சு என்ற வாசகத்தை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேரவையில் முதல்முறை உரையாற்றும் உறுப்பினர்கள் கன்னிப்பேச்சு என்று தங்களுடைய பேச்சினை துவங்குவார்கள்.
இதனையடுத்து இந்த வாசகம் பெண்களை இழிவுப்படுத்துவதை போன்று இருப்பதால், அதை தவிர்க்க வேண்டுமென பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த லதா கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து தற்போது தவெக எம்எல்ஏ சிந்து முன்வைத்துள்ள கோரிக்கை பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

