தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் த.வெ.க சார்பில் மதுரையில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா, மதுரை முனிச்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தவெக ஆட்சியில் சேவை
அப்போது அவர் பேசுகையில், தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் திமுகவினரால் நம்ப முடியவில்லை. நாம் காணும் காட்சி நிஜம் தானா? மதுரையிலா தவெக இத்தனை சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது? நீங்கள் இதற்கு முன்பு பார்த்த அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ? அதிகாரிகள் போலவோ எங்கள் ஆட்சியில் இருக்காது.
தவெக அரசு வேறு
மாற்றத்தை தேடி எங்களுக்கு வாக்களித்த மதுரை மக்களுக்கு உறுதியாக சொல்லுகிறோம். எந்த ஒரு தனி மனிதருக்காகவும் இந்த ஒரு அரசு இயங்காது. அதை முதல்வரே கூறிவிட்டார். இதற்கு முன்பு நீங்கள் பார்த்த அரசு வேறு, தவெக அரசு வேறு.
இந்த தேர்தலில் நீங்கள் பார்த்த வெற்றியை விட பல மடங்கு வெற்றியை, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் விரைவில் பார்ப்பீர்கள். நல்ல அதிகாரிகளை முதலமைச்சர் நியமித்துள்ளார். நல்ல ஒரு ஆட்சியை தருவதற்கு தான் என்று உரையாற்றினார்.
திருப்பரங்குன்றத்தில் மயக்கம் ஏன்?
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, தென் மாவட்டத்தில்தான் அதிக அளவுக்கு சட்டவிரோத குவாரிகளும் மணல் திருட்டும் நடைபெற்றுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. சட்டவிரோத குவாரிகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது
ஆங்காங்கே ஒரு சில இடத்தில் தனிப்பட்ட காரணங்களால் நடைபெறும் கொலை, குற்றச் சம்பவங்களை தடுக்க உடனுக்குடன் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கபடுகிறது. கடந்த திமுக ஆட்சி, குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றனர். பாலியல் குற்றங்கள் நடந்தபோது விசாரணை ஒரு வாரம் கழித்துதான் நடக்கும். அதுவும் நீதிமன்ற உத்தரவிட்டுதான் செய்தார்கள்.
தனிப்பட்ட காரணங்களால் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. குற்றச் சம்பவங்கள் நடந்தாலும், அதனை கடந்த அரசை விட, நமது அரசு சிறப்பாக கையாள்கிறது. குற்றச் சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்
கட்சியில் இணைந்ததாக கூறி, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது என்பது தவறானது. எங்களது கட்சி பெயரை தவறாக கூறியுள்ளார். நானே தான் டாஸ்மாக் மேலாளருக்கு போன் செய்து நடவடிக்கை எடுக்க சொன்னேன்.
எங்கள் கட்சியினர் யாரும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள். அதனை முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு உடனடி தேவையான 5 கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கி உள்ளார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

