Dailyhunt
tiruvannamalai girivalam திருவண்ணாமலை கிரிவல அதிசயம்...ரமண மகரிஷி கூறிய ஆன்மீக உண்மை

tiruvannamalai girivalam திருவண்ணாமலை கிரிவல அதிசயம்...ரமண மகரிஷி கூறிய ஆன்மீக உண்மை

Samayam Tamil 2 weeks ago

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதன் மகிமை குறித்து பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள். குறிப்பாக பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் பாவங்கள் நீங்கும், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும், மன அமைதி பெருகும், இறுதியில் முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால்,"இந்த நன்மைகளுக்கு ஏதேனும் உண்மையான ஆதாரம் இருக்கிறதா?" என்று கேட்பவர்களும் உண்டு. அத்தகைய சந்தேகங்களுக்கு நேரடியான பதிலாக, ரமண மகரிஷி பக்தர்களிடம் கூறிய ஒரு அற்புதமான உண்மை சம்பவம் உள்ளது.

திருவண்ணாமலை கிரிவல அதிசயம் :

திருவண்ணாமலை, சிவனின் அருள் நிறைந்த புனித நிலம். அங்கு கிரிவலம் செய்வது, இறைவனின் அருளடியில் நாம் தவழ்வதைப் போன்றது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த கிரிவலப் பாதையில், கால்கள் செயலிழந்த ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவரது இரண்டு கால்களும் உணர்வு இழந்து, நடக்க முடியாத நிலை. இருந்தாலும் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி அவர் கிரிவலம் செல்வது வழக்கம். ஒருநாள் அவரது முகத்தில் வழக்கமான பக்தி ஒளி இல்லை. பதற்றமும், சோர்வும், மனக்குழப்பமும் தென்பட்டது. காரணம்,"நான் என் குடும்பத்திற்குப் பாரம். என்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. நான் இல்லாமல் போனால் அவர்களுக்கு நல்லது". அதனால், "இது என் கடைசி கிரிவலம்" என்று முடிவு செய்து, யாரிடமும் சொல்லாமல், கிரிவலம் முடிந்தவுடன் எங்கோ தெரியாத இடத்திற்கு சென்று மறைந்து விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்.

அந்த முதியவர் மிகவும் கஷ்டப்பட்டு, பாதி வழி வந்திருந்தார். அப்போது, எதிரே ஒரு இளைஞன் வந்தான். அவன் அருகில் வந்து, முதியவரை பார்த்து கடுமையாகக் கூறினான். "கால்கள் சரியில்லாத நீ இப்படி கிரிவலம் வர வேண்டுமா? இது உனக்கு தேவையா?" என கேட்டான். அதற்கு அவர் பதில் கூறுவதற்குள், அந்த இளைஞன் திடீரென அவரது கட்டைகளைப் பிடுங்கி, தூரத்தில் எறிந்துவிட்டு வேகமாகப் போய் விட்டான்.

நிகழ்ந்த அதிசயம் :

முதியவரின் மனம் கொதித்தது. "இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி துன்புறுத்தலாமா?" என்று அவர் கோபத்துடன் அவனை திட்டத் தொடங்கினார். ஆனால், ஒரு நொடியில் அவரது கோபம் திடீரென மௌனமாக மாறியது. அவர் தன்னைப் பார்த்தார். அதிர்ச்சியில் உறைந்தார். அவரது கால்கள் சீராக நின்றிருந்தன. கட்டைகள் இல்லாமல், நொண்டாமல் நிமிர்ந்து நின்றார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவர் உடனே அந்த இளைஞன் சென்ற திசையை நோக்கி கைகளை கூப்பி தொழுதார்.

அந்த இளைஞன் யார்? சாதாரண மனிதனா? இல்லை. அருணாச்சலேஸ்வரர் தான். மனித உருவில் வந்து, அந்த முதியவரின் துன்பத்தை நீக்கி, அவருக்கு புதிய வாழ்க்கையை அளித்தார். அதன் பிறகு அந்த முதியவர் தனது முடிவை முற்றிலும் மாற்றிக் கொண்டார். திருவண்ணாமலையை விட்டு எங்கும் செல்லவில்லை. அங்கேயே இருந்து, பல்லாண்டுகள் பக்தியுடன் வாழ்ந்து, இறுதியில் இறைவனடி சேர்ந்தார். இந்த சம்பவத்தை, ரமண மகரிஷி அவர்கள் விருப்பாட்சி குகையில் இருந்த போது பக்தர்களிடம் பலமுறை கூறியதாக சொல்லப்படுகிறது.

கிரிவலத்தின் உண்மையான அர்த்தம் :

திருவண்ணாமலை கிரிவலம் என்பது வெறும் நடைபயணம் அல்ல. அது இறைவனின் மடியில் நாம் சரணாகதி அடையும் தருணம். அண்ணாமலையை சுற்றுவது என்றால், அவரின் அருளைச் சுற்றி வாழ்வது.அதனால் தான் துன்பம் நீங்குகிறது, மனம் தெளிவடைகிறது, வாழ்க்கை மாற்றம் அடைகிறது, சிலருக்கு அதிசயங்களும் நிகழ்கின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil