ஏதாவது ஒரு முக்கியமான காரணத்துக்காக வங்கியில் இருந்து ஒரு பெரிய தொகையை எடுத்து, அது கைகூடாதபோது வங்கிக் கணக்கிலேயே பணத்தை மீண்டும் டெபாசிட் செய்யும் சூழல் பலருக்கு ஏற்படுகிறது.
அப்படி நீங்களும் செய்வதாக இருந்தால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், வருமான வரித்துறை பெரும்பாலும் அத்தகைய தொகைகளை அறிவிக்கப்படாத வருமானமாகக் கருதுகிறது. மேலும் அந்தப் பணத்தின் ஆதாரம் குறித்து உங்களிடம் கேள்வியும் கேட்கலாம்.
ஆனால் இப்போது, வரி செலுத்துவோர் இது போன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கும் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் காலத்தைச் சேர்ந்த இந்த முழு வழக்கும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒரு பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து 15 லட்சம் ரூபாயை தவணை முறையில் எடுத்தார்.
நாடு தழுவிய பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தபோது, அவர் அதே 15 லட்சம் ரூபாயை மீண்டும் தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார். வருமான வரித்துறைக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை யாரும் வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள் என்று வருமான வரிடத துறை வாதிட்டது. பொதுவாக மக்கள் இவ்வளவு பெரிய தொகையை வேறு இடங்களில் முதலீடு செய்வார்கள் அல்லது அதன் மீது வட்டி ஈட்ட முயற்சிப்பார்கள் என்று வாதிட்டனர். இதன் அடிப்படையில், வருமான வரித் துறை அதனை அறிவிக்கப்படாத வருமானமாகக் கருதி, பிரிவு 69A-இன் கீழ் வரியுடன் அபராதமும் விதித்தது.
வருமான வரித் தீர்ப்பாயம் கூறியது என்ன?
இந்த விவகாரம் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (ITAT) எட்டியபோது நிலைமை மாறியது. தீர்ப்பாயம், வருமான வரித் துறையின் வாதங்களை நிராகரித்தது. வரி விதிப்பிற்கான அடிப்படை உறுதியான ஆதாரங்களாக இருக்க வேண்டுமே தவிர, வெறும் ஊகங்களாக இருக்கக்கூடாது என்று ITAT கூறியது. வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணமும், முன்பு எடுக்கப்பட்ட பணமும் ஒன்றுதான் என்று ஒருவர் நிரூபித்தால், அதை மறுமுதலீடு செய்யப்பட்டதாகவோ அல்லது புதிய வருமானமாகவோ கருத முடியாது என்று தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியது.
வரி செலுத்துவோர் பணத்தின் ஆதாரம் குறித்த தகவல்களை வழங்கியிருந்ததால், இந்த முடிவு அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. இந்தத் தீர்ப்பின் போது, தீர்ப்பாயம் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைத்தது. ஒருவர் தனது பணத்தை வங்கியில் வைப்பதா அல்லது வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதா என்பது முற்றிலும் அவருடைய சொந்த முடிவு என்று கூறியுள்ளது. ஒருவர் தனது பணத்தை எங்கே, எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை வருமான வரித் துறை தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளது. தங்கள் தேவைக்கேற்ப வீட்டில் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு இந்த வாதம் மிகவும் வலுவானதாக அமைந்தது. ஒருவர் பணத்தை முதலீடு செய்யவில்லை என்பதற்காக மட்டும், வருமான வரித் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது.
பொது மக்களுக்கு எப்படி நிவாரணம் கிடைக்கும்?
மக்கள் பெரும்பாலும் நிலம் வாங்குவதற்கோ, திருமண ஏற்பாடு செய்வதற்கோ அல்லது மருத்துவ அவசரநிலையைச் சமாளிப்பதற்கோ வங்கியில் இருந்து பெரிய தொகையை ரொக்கமாக எடுக்கிறார்கள். சில சமயங்களில், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ, அவர்கள் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு பணத்தை மீண்டும் வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். அத்தகைய சூழலில், வருமான வரிச் சட்டத்தின் 68 மற்றும் 69A பிரிவுகள் தனிநபர்களுக்கு ஒரு பிரச்சனையாகின்றன.
இந்நிலையில், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முடிவு இப்போது அத்தகைய தனிநபர்களுக்கு ஒரு கேடயமாகச் செயல்படும். இப்போது, உங்களிடம் பணம் எடுத்ததற்கான ஆதாரம் இருந்தால் வருமான வரித் துறையின் நோட்டீஸுக்கு நீங்கள் பதிலளிக்கலாம். நீதிமன்றம் நிவாரணம் வழங்கியிருந்தாலும், நீங்கள் துல்லியமான பதிவுகளைப் பராமரிக்க வேண்டும். நீங்கள் வங்கியில் இருந்து பெரிய தொகையை எடுக்கும்போதெல்லாம், வங்கி அறிக்கையை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
மேலும், நீங்கள் ஒரு வணிக உரிமையாளராக இருந்தால் பணப்புழக்கத்தை நிர்வகிக்க உங்கள் கணக்குப் புத்தகங்களில் கையில் உள்ள ரொக்கத்தின் தெளிவான பதிவைப் பராமரிக்க வேண்டும். பணம் எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க கால இடைவெளியைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இருப்பினும், சிறிது காலம் கடந்திருந்தாலும், பணம் எடுத்ததற்கான ஆதாரம் குறித்த முழுமையான தகவல் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.

