சத்யராஜ் பேச்சு: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களை கைப்பற்றியிருக்கிறது.
அந்த வெற்றிக்கு இரண்டுவிதமான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். விஜய் தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார் என அவரின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மற்றவர்களோ, தவெகவுக்கு எதன் அடிப்படையில் ஓட்டு போட்டார்கள் என்பது தெரியாமல் தூக்கம் வரவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் திமுகவுக்காக வாக்கு சேகரித்த நடிகர் சத்யராஜ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
திரு. விஜய் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தான் தங்களின் கொள்கை தலைவர்கள் என்று விஜய் அவர்கள் தெரிவித்தார். அந்த தலைவர்கள் வழிநின்று சிறப்பான சமூகநீதி ஆட்சியை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் அன்பு சகோதரர் திமுக தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தோல்வி எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. ஆனால் தோல்வியை கண்டு துவண்டுவிடும் ஆள் இல்லை அவர்.
ஸ்டாலினுக்கு வாழ்த்து: திரு. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளாக டெல்லி அஞ்சாமை எனும் நிலைப்பாட்டை கொண்டு பல நல்ல வளர்ச்சித் திட்டங்கள், நலத் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டால் நான் கடந்த 5 வருடமாக அந்த அரசுக்கும், திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாக இருந்தேன். இனியும் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
சத்யராஜ், மகள் திவ்யா: முன்னதாக பிரச்சாரம் செய்தபோது விஜய் பற்றி பேசினார் சத்யராஜ். அவர் ஒரு நடிகர் என்பதால் மக்களுக்கு விஜய்யை பிடிக்கும். அதனால் விஜய் இருக்க வேண்டிய இடம் சினிமா தானே. ஏதோ ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்திருக்கிறார் தம்பி விஜய் என்றார்.
சத்யராஜ் பேசியது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காமல் அவரை விளாசினார்கள். மேலும் சத்யராஜின் மகள் திவ்யாவோ அரசியலுக்கு வரும் முன்பு மக்களுக்கு என்ன நல்லது செய்தீர்கள் விஜய் என்று பட்டியல் கேட்டார். அதற்கு விஜய் சார்பில் சிபி சத்யராஜ் பட்டியலை கொடுக்க சத்யராஜ் குடும்பத்தில் பிரச்சனை என பேச்சு கிளம்பியது.
விஜய் விவகாரத்தால் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லை. எனக்கும், அண்ணனுக்கும் வெவ்வேறு விஷயங்கள் பிடிக்கும். ஒரே விஷயம் தான் பிடிக்கும் என்று இல்லை. நாங்கள் முற்போக்கான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என விளக்கம் அளித்தார் திவ்யா சத்யராஜ். திமுகவினருக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற திவ்யா மீது தவெகவினர் செருப்பு வீசியதை பார்த்த சினிமா ரசிகர்களோ சிபியை கேள்வி கேட்டார்கள். இப்பொழுது கூடவா விஜய் கட்சியினரை கேள்வி கேட்க மாட்டீர்கள் சிபி என்றார்கள்.

