தமிழக அரசியல் வரலாற்றை திருத்தி எழுதியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபெரும் திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி கட்டிலை அலங்கரித்து வந்தன.
மூன்றாவது சக்தியாக மாற்று அரசியலை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வந்தது.
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்து எக்ஸிட் போல் கணக்குகளையும், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கணிப்புகளையும் தூள் தூளாக்கி கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போகிறார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பிற்கான வேலைகள் விறுவிறுவென நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இலங்கையில் இருந்து அரசியல் தலைவர்கள் பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்க்கு இலங்கை எம்.பி வாழ்த்து
அதில், எம்.பி அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்தில் பேசியது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், எங்கள் தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இலங்கை தமிழன், அடக்கப்பட்ட தமிழன் என்ற தமிழ் குரலாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக பேச வேண்டிய விஷயம் என்பது மின்சாரத் தடை. வடக்கு மாகாணங்களில் தீவுப் பகுதிகளில் வழங்கப்படுவது இல்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
கச்சத்தீவு, யாழ்ப்பாணத்தை கொடுத்துடுங்க
சமீபத்தில் நெடுந்தீவிற்கு பயணித்த போது அங்கு பாதிக்கு பாதி மக்களுக்கு மேல் மின்சாரம் இல்லை. 7 நாட்களில் 5 நாட்கள் மின்சாரம் இல்லை. இந்த தீவுப் பகுதிகளில் கச்சத்தீவை விஜய் கேட்டிருக்கிறார் என நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். எங்கள் ஜனாதிபதி கச்சத்தீவை தர மாட்டார் என்று கூறியுள்ளீர்கள்.
நாங்கள் சொல்கிறோம். கச்சத்தீவை மட்டுமல்ல. யாழ்ப்பாணத்தையும் தமிழக மக்களுக்கு கொடுக்க சொல்கிறோம். எங்களை தமிழக மக்கள் எங்களை பார்த்து கொள்வர். எனவே எப்போது எங்களுக்கு மின்சார வழங்கப்படும். அவ்வளவு தான் எங்களின் கேள்வி எனப் பேசி முடித்தார். இதுதொடர்பான வீடியோவை தான் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
யார் இந்த அர்ச்சுனா ராமநாதன்?
- இவர் ஒரு தமிழ் எம்.பி. முழு பெயர் அர்ச்சுனா ராமநாதன்.
- வயது 39.
- யாழ்ப்பாணத்தில் உள்ள சவகச்சேரி பேஸ் மருத்துவமனையில் சுகாதார மேலாளர்.
- மருத்துவமனையில் நடந்த முறைகேடுகளை சமூக வலைதளங்கள் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தி கவனம் பெற்றவர்.
- நாடு முழுவதும் மருத்துவத்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி மக்களிடம் பிரபலமானார்.
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
- இலங்கை அரசின் LGBT கொள்கை நிலைப்பாடு தொடர்பாக பேசி சலசலப்பை ஏற்படுத்தினார். ஓரினச் சேர்க்கை என்பது மனநோய். அதை குணப்படுத்த முடியும் என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.
இலங்கை கடற்படை கைது நடவடிக்கை
தமிழக மீனவர்களுக்கு தீராத பிரச்சினையாக இருப்பது கச்சத்தீவு. ஏனெனில் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது, தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது போன்ற நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது. இதற்கு மத்திய, மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் விஜய் ஆட்சி காலத்தில் ஏதேனும் முன்னேற்றம் நிகழுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

