சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மே 10, 2026) காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார்.
இவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் உடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வர் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஆண்கள், ஒருவர் பெண். அந்த பெண் எஸ்.கீர்த்தனா. இவரை பற்றிய தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.
யார் இந்த எஸ்.கீர்த்தனா?
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டவர். இவருடைய வயது 30. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதம் படித்தவர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியல் படித்திருக்கிறார். இன்னும் திருமணம் ஆகாதவர். மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தி வருபவர். இவரது ஆண்டு வருமானம் என்பது 2025-26ஆம் நிதியாண்டின் படி 6.3 லட்ச ரூபாய் ஆகும். கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக Showtime Consultancy மற்றும் IPAC ஆகிய நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராகவும், டிஜிட்டல் பரப்புரை வியூகம் வகுப்பவராகவும் இருந்துள்ளார்.
5 மொழிகளில் பேசும் கீர்த்தனா
குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரையில் பணியாற்றியுள்ளார். எனவே அரசு, நிர்வாகம், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இவருக்கு 5 மொழிகள் தெரியும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். இதன்மூலம் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிவது பெரிதும் எளிதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் பேசி அசத்திய கீர்த்தனா
சமீபத்தில் கூட தேசிய ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது ஹிந்தியில் பேசி ஆச்சரியப்படுத்தினார். அதில், இந்தியில் பேசுவதை பலர் சர்ச்சையாக பார்க்கின்றனர். ஆனால் தவெக தொண்டராக, ஒரு தலைவராக தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே ஹிந்தியில் பேசுகிறேன். குறிப்பாக மற்ற மாநில மக்களுக்கு அவர்களது மொழியில் பேசும் போது உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும்.
என்னுடைய கட்சி பிரதிநிதித்துவத்தை இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கீர்த்தனா தெரிவித்திருந்தார். மேலும் பேசுகையில், அரசியலை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இதில் சாதி இருக்கிறது, பணம் இருக்கிறது என நினைக்க வேண்டாம். அனைவரும் அரசியலில் பங்கெடுக்க வேண்டும். அதற்கு நான் ஓர் உதாரணமாக இருக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.
சிவகாசி தொகுதியில் கீர்த்தனா பெற்ற வெற்றி
இந்த தொகுதியை பொறுத்தவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்ட தொகுதி. இதனால் கவனம் முழுவதும் அவர் மீதே இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதையடுத்து தவெகவில் மிக இளம் தலைவர் கீர்த்தனா போட்டியிட்டதால் இவர் வெற்றி பெறுவாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாக பேசினர். ஆனால் இரண்டு மூத்த தலைவர்களை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு சதவீதம் |
| தவெக | கீர்த்தனா எஸ் | 68,709 | 35.56 |
| காங்கிரஸ் | அசோகன் ஜி | 57,039 | 29.52 |
| அதிமுக | ராஜேந்திர பாலாஜி கே.டி. | 51,078 | 26.45 |
| நாம் தமிழர் கட்சி | எஸ்தர் மேரி டயானா ஏ | 10,191 | 5.27 |
| நோட்டா | நோட்டா | 948 | 0.49 |
| வாக்கு வித்தியாசம் | 11,670 | ||
| பதிவான மொத்த வாக்குகள் | 1,93,128 | ||
| மொத்த வாக்காளர்கள் | 2,41,403 |
கீர்த்தனாவிற்கு எந்த துறை ஒதுக்கீடு செய்யப்படும்?
கீர்த்தனா இன்று காலை பதவியேற்றதை அடுத்து, எந்த துறையை கையாளப் போகிறார் என அடுத்த சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும். பதவியேற்பு விழா முடிவடைந்ததை அடுத்து, தலைமை செயலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து காத்திருக்கின்றனர். அங்கு சில கோப்புகளும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே முதலமைச்சர் மட்டுமின்றி ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் எதற்கு முதல் கையெழுத்தை போடப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

