நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் 18வது முதலமைச்சராக இன்று காலை 10 மணியளவில் பதவியேற்றார்.
அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் ராஜ்மோகன். தற்போது, இவர் யார்? எப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் என்பது குறித்து பார்ப்போம்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாகவே பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்தது. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தருவதாக தெரிவித்ததன் மூலமாக 120 சட்டமன்ற உறுப்பினர்களை தவெக பெற்றிருந்தது. அந்த 120 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருப்பவர் தான் ராஜ்மோகன். தவெகவின் முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர்.
பேச்சாளராக தவெகவில் எண்ட்ரீ கொடுத்த ராஜ்மோகன்
பேச்சாளர், சமூக வலைதளப் பிரபலம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்ட ராஜ்மோகன் தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பே கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது, விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாக சேலத்தில் தவெக நிர்வாகிகளுக்காக ஒரு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு இருந்தது. அந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக ராஜ்மோகன் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில் ராஜ்மோகனின் தந்தை சீரியஸாக இருந்தார். ஆனாலும், விஜய்க்காக அந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசினார்.
கொள்கைப் பரப்புச் செயலாளர்
ஆரம்பக்கட்டத்திலேயே ஈடுபாட்டோடு இருந்ததால் ராஜ்மோகனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முதன் முதலில் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்கிற பெரிய பதவி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை பரப்பி வந்தார்.
மேலும், அக்கட்சியின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் சென்றடைவதற்கு ராஜ்மோகனும் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், விஜய் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் அவரை அறிமுகப்படுத்தி வைக்கும் முதல் குரல் ராஜ்மோகனுடையதாகத் தான் இருக்கும்.
எழும்பூர் சட்டமன்றத் தேர்தல் 2026
இந்த நிலையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளராக ராஜ்மோகன் போட்டியிட்டார். அதில், ராஜ்மோகன் 53,901 வாக்குகளைப் பெற்று திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் தமிழன் பிரசன்னாவை 10,804 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலமாக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதற்கட்ட அமைச்சர் பட்டியலில் ராஜ்மோகன்
இந்நிலையில், இன்று தமிழகத்தின் 18வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று இருந்தார். அவரைத் தொடர்ந்து தவெகவை சேர்ந்த 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், ராஜ்மோகனும் பதவியேற்றுக் கொண்டார். 'சி.ஜோசப் விஜய் எனும் நான்..' என்று விஜய் சொல்லும்போது மேடையில் ராஜ்மோகன் வெளிப்படுத்திய சந்தோஷம் அளவுக்கடந்ததாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ராஜ்மோகனுக்கு அமைச்சரவையில் என்ன பொறுப்பு?
அதேபோல், ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று விஜய்யை காட்டி பதவியேற்றுக் கொண்ட விதம் அக்கட்சியின் மீதும், முதல்வர் விஜய் மீதும் அவர் கொண்டிருந்த உண்மையான அன்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி இருந்தது. அமைச்சராக பதவியேற்ற ராஜ்மோகனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

