Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'தம்பி'க்காக காத்திருக்கும் நிகிலா விமல்

'தம்பி'க்காக காத்திருக்கும் நிகிலா விமல்

screen4screen 6 years ago

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஜோதிகார், கார்த்தி, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'தம்பி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் நிகிலா விமல்.

இவர் தமிழில் சசிகுமார் நடித்த 'வெற்றிவேல், கிடாரி' படங்களில் நாயகியாக நடித்தவர்.

'தம்பி' படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி, அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன், கார்த்தியின் ஜோடியாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா ? என்றார். அவர் நேர்மையாகக் கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன். மேலும், தொழில்நுட்பம் மற்றும் பெரிய நடிகர்கள் இருப்பதால், ஒரு நல்ல படத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க, கோவிந்த் வசந்தா இருக்கிறார்.

என்னுடைய கதாபாத்திரமும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்வது என்றில்லாமல், ஒரு புள்ளியில் கதையோடு தொடர்பு இருக்கும். நடிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தான் எனக்கும் விருப்பம். ஐந்து வருடங்கள் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. காத்திருந்தாலும் நல்ல படம், நல்ல குழுவுடன் இணைந்து நடிப்பதே விருப்பம். என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே நடிப்பேன், அது வரை காத்திருப்பேன்.

'கிடாரி'க்குப் பிறகு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது. நான் நடித்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து அதிக படங்கள் அங்கேயே நடிக்கும்படியான சந்தர்ப்பம் அமைந்தது. மேலும், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

'தம்பி' படம் மூலம் தமிழில் இது மறு பிரவேசம் என்று கூட சொல்லலாம்.

எனக்கு தமிழ் தெரிந்ததால் இப்படத்தில் நடித்தது எளிதாக இருந்தது. சிறந்த இயக்குனரிடம் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தில் நடித்தேன்.

சில நடிகர்களுக்கு ஒரே பாணியான படங்கள் மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் வந்து விடும். ஆனால், கார்த்தி எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சரியாக நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்.
தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ளாமல் கமர்சியல் படமாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தாலும், இல்லை இரண்டும் கலந்து இருந்தாலும் அவர் திறமையாக நடிப்பார். இது போன்ற நடிகருடன் நடிப்பதை பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். அதேபோல் தன்னுடைய பகுதி மட்டும் முடிந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய கலைஞர் கிடையாது. தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதர் தான் கார்த்தி. அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போது, படப்பிடிப்பு தளத்தில் அலங்காரம் செய்து கொண்டிருப்பார். அப்போது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு வசனம் பேசி ஒத்திகைப் பார்த்துக் கொள்ளட்டுமா என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இது போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை.

எல்லோரையும் போல் சூர்யா, ஜோதிகாவை நானும் திரையில் கண்டிருக்கிறேன். இப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்கிறது.

ஊட்டி, பாலக்காடு, கோயம்பத்தூர், கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கோவாவில் கார்த்தியின் பகுதி மட்டும் நடந்தது. சரியான திட்டமிடுதல் இருந்ததால், திட்டமிட்டபடி 65 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம்.

படப்பிடிப்பு தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் கலாய்த்துக் கொள்வோம். இதற்கிடையில், சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் பேசுவோம். சூர்யாவும் ஒரு நாள் வந்தார். அவரிடமும் பேசினேன்.

என்னுடைய தோழி அபர்ணா 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும் போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது.

பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், இந்த படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தியைப் பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில், பாடலைக் கேட்கும் போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இது தவிர, விருந்து பாடலும், கோவாவில் கார்த்திக்கு ஒரு பாடலும் இருக்கிறது.

நான் கோவிந்த் வசந்தாவின் பேண்ட் வாத்தியத்தின் விசிறி. சமீபத்தில், கேரளாவில் அவருடைய இசை ஆல்பம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். '96' மற்றும் 'அசுரவதம்' படத்தில் அவருடைய பின்னணி இசை பிடிக்கும்.

இப்படம் இரண்டு குடும்ப உறவுகள் கலந்த திரில்லர் படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்தின் கதையைப் பற்றி விளக்க முடியாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க டிசம்பர் 20-ம் தேதி வரை நாங்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும், 'கிடாரி' படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று இன்னமும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கும் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்கள் இல்லாததால், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்," என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: screen4screen