தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தவெக, அடுத்தகட்டமாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக 2029 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தவெக தற்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே இந்த திட்டம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்யை தேசிய அளவில் முன்னிறுத்துவதற்கான காரணங்கள் குறித்து தவெக தரப்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக தவெக தொடங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு என தனித்துவமான கொள்கைகளும் அரசியல் செயல்திட்டங்களும் இருப்பதாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருவதாக தெரிகிறது.
இதற்காக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் சூழலை தவெகவினர் உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். அப்போது ஜனதா தளம் கட்சி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு உருவான கூட்டணி மற்றும் அரசியல் சூழ்நிலையின் காரணமாக அக்கட்சியின் தலைவர் தேவகவுடா பிரதமராக பதவியேற்றார்.
அதேபோன்ற ஒரு சூழல் 2029ஆம் ஆண்டிலும் உருவாகலாம் என்பதே தவெகவின் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென் மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 100 இடங்களை கைப்பற்ற முடிந்தால், மத்தியில் உருவாகும் கூட்டணி அரசியல் சூழலில் விஜய்யை பிரதமராக முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என தவெக தரப்பு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக தமிழகத்தை தாண்டி கட்சியின் அரசியல் அடையாளத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தவெக கருதுவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றுவது குறித்தும் கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் பின்னர் பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றப்பட்டதைப் போல, மாநில அடையாளத்தை கடந்து தேசிய அளவில் கட்சியை முன்னெடுக்கும் நோக்கத்திலேயே பெயர் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் அமைப்பை உருவாக்கவும், தேசிய அளவில் கட்சிக்கு அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என தவெக தரப்பு கருதுவதாக தெரிகிறது.
இதற்கிடையே, வட மாநிலங்களில் இந்தி மொழி சமூக வலைதளப் பக்கங்களில் விஜய் தொடர்பான வீடியோக்கள் மற்றும் பிரசாரங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய்யை தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அளவில் அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.
தற்போது தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டாலும், தேசிய அரசியலில் தென்னிந்தியாவின் குரலாக விஜய்யை நிலைநிறுத்தும் நோக்கில் தவெக தனது அடுத்தகட்ட அரசியல் வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போதைய அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனைகள் மட்டுமே. கூட்டணி அமைப்புகள், கட்சியின் விரிவாக்கம் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே விஜய்யின் தேசிய அரசியல் பயணம் எந்த திசையில் செல்லும் என்பது வரும் ஆண்டுகளில் தெளிவாகும்.
Seithi Punal
