தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 10:50 மணி நிலவரப்படி, தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 106 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் மிரட்டி வருகிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஆளும் திமுக கூட்டணி வெறும் 51 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் நிலவரங்கள் திமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியாகி வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அங்கு வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தல்கள் மற்றும் பொருட்கள் மீண்டும் வேன்களில் ஏற்றி அகற்றப்படுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது திமுக தனது தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டு விட்டதோ என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.
இருப்பினும், இந்தச் செய்தியை அங்கிருந்த திமுக தொண்டர்கள் மறுத்துள்ளனர். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தொண்டர் ஒருவர் கூறியதாவது: அகற்றப்படும் பந்தல்கள் நேற்று இரவு நடைபெற்ற ஒரு நிகழ்விற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள். இவற்றிற்கும் தற்போதைய தேர்தல் முடிவுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
Seithi Punal
