Dailyhunt
ஆட்சி போனாலும் மக்கள் பணி ஓயாது...எதிர்க்கட்சியாக எங்களின் அரசியல் தொடரும்...! - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அறிக்கை...!

ஆட்சி போனாலும் மக்கள் பணி ஓயாது...எதிர்க்கட்சியாக எங்களின் அரசியல் தொடரும்...! - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அறிக்கை...!

டந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு, மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் உணர்ச்சி பூர்வமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.அவர் தனது பதிவில், "இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முன்னேற்றக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வாக்களித்த தமிழக மக்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியை ஆழ்ந்த உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் எங்களின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளமாக நான் கருதுகிறேன்.தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த அபார ஆதரவை வழங்கிய மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மேலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி நம்மை விட வெறும் 17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்றுள்ளது. வாக்கு சதவீத வேறுபாடும் 3.52 சதவீதம் மட்டுமே என்பதால், மக்களின் நம்பிக்கை இன்னும் நம்மிடம் உறுதியாக இருப்பதை நான் வலிமையாக உணர்கிறேன்.நமக்கு வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பது எங்கள் கடமையாகும்.

ஆகவே, கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் உடனடியாக மக்களைச் சந்தித்து நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.மக்களாட்சியில் மக்களே உயர்ந்தவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்காகவே நாம் அரசியலில் செயல்படுகிறோம்; அவர்களுக்காகவே நம் இயக்கம் இயங்குகிறது.

எனவே, அனைவரும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழகம் பல முறை ஆட்சியை அனுபவித்துள்ளது. வெற்றியும் தோல்வியும் அரசியல் பயணத்தின் இரு பக்கங்களாகும். எந்நிலையிலும் நம் கொள்கைகள் சாய்ந்துவிடாதபடி காக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வெற்றி, தோல்வி என்ற வேறுபாடின்றி இலட்சியப் பாதையில் உறுதியாக பயணிப்பதே கழக உடன்பிறப்புகளின் தனிச்சிறப்பு.என்னை உற்சாகப்படுத்தி பலரும் குறுஞ்செய்திகள் அனுப்பி வருகிறீர்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு என்றும் துணை நிற்கும். நீங்கள் என்னுடன் இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை. நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் அன்பு உறவுகளாக இணைந்து செயல்படுவோம்.உங்கள் உழைப்பின் பலனாக கிடைத்த 1.54 கோடி வாக்குகள் எங்களுக்கு பெரும் பொறுப்பை ஏற்படுத்துகின்றன.

அதற்கான நன்றியைச் செலுத்தும் விதமாக, தலைமைத் தொண்டனாக நான் தொடர்ந்து உழைப்பேன்.ஆட்சியில் இருந்தால் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுப்போம்; எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் உரிமைக்காக உறுதியுடன் போராடுவோம். இந்நிலையில், வலுவான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை முன்னெடுத்து, இனம், மொழி, நாட்டை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபடுவோம். எவரையும் பின்தங்க விடாமல், ஒருங்கிணைந்த முன்னேற்றப் பயணத்தை முன்னெடுத்து, மீண்டும் வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal