ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 'வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்' நிகழ்ச்சியில் திருவள்ளுவரின் உருவப்படம் காவி நிற உடையுடன் வைக்கப்பட்டிருந்தது அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவரின் உருவப்படம் காவி நிற ஆடையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவள்ளுவரை இந்து மத அடையாளத்துடன் இணைக்கும் முயற்சியாக இதை சில அமைப்புகள் முன்னெடுத்து வருவதாகக் கூறி, திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் பயன்படுத்தப்பட்டிருப்பது அரசியல் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவி நிறம் பூசப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
அவர் தனது பதிவில்,"தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஜனவரியில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுகிறது. ஆனால் தற்போது வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுவது எங்கிருந்து வந்தது?"என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,"தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தோம். இப்போது மீண்டும் தமிழர்களின் சுயமரியாதையை சோதிக்கும் வகையில் செயல்படுகின்றனர்"என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி,"தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் முதலில் பாட அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லியில் கோரிக்கை வைத்தது போல, இந்த விவகாரத்திலும் அரசு உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டும். வள்ளுவருக்கு காவி நிறம் பூசப்படுவதை எதிர்த்து பேசுவதற்கும் தயங்குவது ஏன்?"என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளுவரின் அடையாளம் தொடர்பான விவாதம் தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஒரு தரப்பு திருவள்ளுவரை சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட உலகப் பொதுமறை கவிஞராகக் கருதுகிறது. மற்றொரு தரப்பு அவரை இந்து மரபுடன் இணைத்து விளக்குகிறது.
ஆளுநர் மாளிகை நிகழ்வைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் அரசியல் மையப்புள்ளியாக மாறியுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை அல்லது தமிழக அரசு தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Seithi Punal
