2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரத்தில், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும் நடிகையுமான விந்தியா இன்று அதிரடியாகக் களம் இறங்கினார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், தமிழக வரலாற்றில் மக்களுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உன்னதமான திட்டங்களைச் செயல்படுத்திய ஒரே கட்சி அதிமுகதான் என்று ஆணித்தரமாகத் தனது உரையில் குறிப்பிட்டார்.
மக்களிடையே பேசிய விந்தியா, "தமிழகத்தில் இன்று நாம் பார்க்கும் பெரும்பாலான முன்னோடித் திட்டங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் புரட்சித்தலைவி அம்மாவால் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டவை. தொட்டில் குழந்தைத் திட்டம் முதல் தாலிக்குத் தங்கம், விலையில்லா அரிசி மற்றும் லேப்டாப் திட்டங்கள் வரை அனைத்தும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவை. ஆனால், இன்றுள்ள விடியா அரசு, பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதிலேயே குறியாக உள்ளது" என்று திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடினார்.
மேலும், தற்போதைய 2026 தேர்தல் களம் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல, அது மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் களம் என்று அவர் விவரித்தார். "அதிமுகவின் திட்டங்கள் காகிதத்தில் மட்டும் இருப்பவை அல்ல; அவை ஒவ்வொரு ஏழைத் தாயின் அடுப்படியிலும், ஒவ்வொரு மாணவனின் கல்வியிலும் உயிர்ப்புடன் இருப்பவை. எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஒரு பொற்கால ஆட்சி அமையும்போது, தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விந்தியாவின் இந்தப் பேச்சைக் கேட்கத் திரண்டிருந்த மகளிர் கூட்டத்தில் பலத்த வரவேற்பு காணப்பட்டது. நகைச்சுவை மற்றும் காரசாரமான அரசியல் விமர்சனங்கள் கலந்த அவரது உரை, தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு ஒரு கூடுதல் உத்வேகத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, "அதிமுக என்பது மக்களின் சொத்து; அதை அழிக்க எவராலும் முடியாது" என்ற அவரது முழக்கம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், அதிமுகவின் சாதனைகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கப் போவதாக அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
Seithi Punal
