புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் தற்போது அனல் பறக்கும் நிலையை எட்டியுள்ளது. 30 தொகுதிகளைக் கொண்ட இந்த யூனியன் பிரதேசத்தில், வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை எதிர்நோக்கி 294 வேட்பாளர்கள் தேர்தல் கோதாவில் குதித்துள்ளனர்.
வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய வேட்பாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து வரும் நிலையில், தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் ஜாம்பவான்கள் புதுவையில் முகாமிட்டு சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது தேர்தல்திருவிழாவை உச்சகட்ட பரபரப்பிற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த அரசியல் யுத்தத்தில், ஒருபுறம் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி பலப்பரிட்சை நடத்துகிறது. மறுபுறம், திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த இந்தியா கூட்டணி சளைக்காமல் மல்லுக்கட்டுகிறது.
இவர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் தனிச்சையாக களம் காண்பதால், புதுச்சேரி தேர்தல் தற்போது விறுவிறுப்பான நான்கு முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, இன்று புதுச்சேரியில் முகாமிட்டு தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்காக வாக்கு வேட்டையாடினார்.
பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், "புதுவை மக்களின் ஈடு இணையற்ற அன்பே என்னை மீண்டும் மீண்டும் இங்கு வரவழைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, அரசுப் பணிக்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும்" என அதிரடி வாக்குறுதிகளை அள்ள வீசினார்.தொடர்ந்து பேசிய அவர், "மக்களின் நலன் கருதி ரூ.20 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு மற்றும் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத ஆட்சியை நாங்கள் வழங்குவோம்" என உறுதிபடக் கூறினார்.அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்த ராகுல் காந்தி, "இந்த மண்ணின் மைந்தர்களே தங்களை ஆள வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆனால் தற்போது டெல்லியின் ஆதிக்கம் இங்கு மேலோங்கியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஜனநாயக உரிமைகள் மீட்கப்படும்.
காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே தாரைவார்க்கப்பட்டுவிட்டது. தற்போது நடைபெறும் ஆட்சியில் ஒவ்வொரு டெண்டருக்கும் 30 சதவீத கமிஷன் கைமாறுகிறது" என ஆளுங்கட்சியின் மீது சரமாரியான புகார்களைப் பட்டியலிட்டார்.இவ்வாறாக ராகுல் காந்தி தனது பரப்புரையில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கப்படுகின்றது.
Seithi Punal
