சத்தீஸ்கர் மாநிலம் தௌண்டி லோஹாரா பகுதியில் 'மஹ்தாரி வந்தன்' திட்டப் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்துகொண்ட இப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக வானிலை மிகவும் மோசமடைந்து மழை பெய்யும் சூழல் நிலவியது. இதனால் நிகழ்ச்சி தடைபடும் அபாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச் சூழலில், நிகழ்ச்சி திட்டமிட்டபடி தடையின்றி நடப்பதற்காகத் தான் புத்ததேவர் மற்றும் மகாதேவரிடம் பிரார்த்தனை செய்து, ஒரு எலுமிச்சைப் பழத்தை வெட்டியதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போஜ்ராஜ் நாக் தெரிவித்துள்ளார். தான் எலுமிச்சைப் பழத்தை வெட்டி வேண்டிக்கொண்ட பிறகே மழை பெய்யாமல் நின்று நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறியதாகவும், தற்போது திட்டம் வெற்றி பெற்று நிகழ்ச்சி முடிந்ததால் மழை பெய்ய வேண்டுமென்றால் பெய்யட்டும் என்றும் அவர் கூறிய கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவரின் நையாண்டிப் பதிலடி
பாஜக எம்பியின் இந்த மூடநம்பிக்கை சார்ந்த பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ள சத்தீஸ்கர் மாநிலக் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், அவருக்கு நகைச்சுவையான பதிலடி கொடுத்துள்ளார். "ஒரு எலுமிச்சைப் பழத்தை வெட்டுவதன் மூலம் மழையையே தடுத்து நிறுத்த முடியும் என்றால், நாட்டில் உயர்ந்து வரும் சர்க்கரை விலை மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கும் பாஜக எம்பி உடனடியாக ஒரு எலுமிச்சைப் பழத்தை வெட்ட வேண்டும்" என எள்ளலுடன் நையாண்டி செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெடித்த விமர்சனங்கள்
மழையை நிறுத்தியதாகக் கூறப்படும் எம்பியின் இக் கூற்று அறிவியல் பூர்வமற்ற மூடநம்பிக்கையையும் தவறான கருத்துகளையும் பொதுமக்களிடையே பரப்புவதாகச் சமூக ஆர்வலர்களும் இணையவாசிகளும் சாடி வருகின்றனர். எலுமிச்சை பழத்தை வெட்டி மழையைத் தடுக்க முடியுமென்றால், அதே விசித்திர முறையைப் பயன்படுத்தித் தொடர்ந்து உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணம், சமையல் எரிபொருள் விலைகள் மற்றும் குடும்பத்தின் அன்றாட வீட்டுச் செலவுகளையும் குறைக்க முடியுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி இணையத்தில் காரசாரமான விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
Seithi Punal
