கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 22 -ஆம் தேதி 10 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளியான கார்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்போது, காவல் துறையிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்தி, தவறி விழுந்ததில் வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிகிச்சை முடிந்ததை அடுத்து கடந்த வியாழன் அன்று கோவை மத்திய சிறையில் கார்த்தி மீண்டும் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் கார்த்தி மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்டு, ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கார்த்திக்கை தாக்கியதில் காயம் அடைந்துள்ளார்.
இதனால், சக கைதிகளிடம் இருந்து கார்த்தியை மீட்ட காவல் துறையினர், கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், கார்த்தி மீது சக கைதிகள் தாக்குதல் நிகழ்த்தியது குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Seithi Punal
